இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசஎஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கொரோனா காலத்திலும் அதிகளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வந்த நிலையில் தற்போது புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியாவில் பல 15க்கும் மேற்பட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் இருந்தாலும், பல்வேறு வெளிநாட்டு ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் வந்துள்ளதால் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்துள்ளது.
ஆனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகிய 5 நிறுவனங்கள் மட்டும் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் ஐடி சேவைத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
டிசிஎஸ் சாதனை
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான இருக்கும் டிசிஎஸ் 2022ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 5,00,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்திய ஐடி துறையில் இதுவரை யாரும் அடைந்திடாத உயரத்தை டிசிஎஸ் தற்போது எட்டியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
ஜூன் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், புதிதாக 20,409 ஊழியர்களைச் சேர்த்துள்ளதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5,09,058 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
5 வருட பயணம்
கடந்த 5 வருடத்தில் டிசிஎஸ் இந்திய சந்தையில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக உள்நாட்டில் அதிகளவிலான திறன் வாய்ந்த ஊழியர்களைச் சேர்த்துள்ளோம். இதேபோல் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
மேலும் கொரோனா தொற்றுக் காலத்தில் பல்வேறு பயணக் கட்டுப்பாடு மற்றும் நெருக்கடி இருந்த வேளையிலும், வர்த்தக விரிவாக்கம் அதிகளவில் செய்யப்பட்ட காரணத்தால் ஊழியர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.
சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், 50000 ஊழியர்கள் என்பது மிகப்பெரிய மைல்கல், ஆனால் வேகமாக வளர்ந்து வரும் இந்த உலகில் 50000 ஊழியர்களை எப்படிக் கட்டமைக்கப்படுவது என்பது தான் தற்போதைய சவால் என்று கூறியுள்ளார்.
உத்தியோக வாழ்க்கை
சராசரியாக ஒரு ஊழியரின் உத்தியோக வாழ்க்கை என்பது 40 வருடம் மட்டுமே, இந்த 40 வருடத்தில் 5 முதல் 6 டெக் சைக்கிள் ஏற்படும். இந்த மாற்றத்தை எதிர்கொள்ள ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமானதாக உள்ளது என டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
திறன் மேம்பாடு
தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 1 கோடி மணிநேரம் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இதில் 478,000 ஊழியர்கள் அஜைல் மெத்தடிலும், 407000 ஊழியர்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பத்திலும் பயிற்சி பெற்று வருகிறார்கள் எனவும் ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ்-ல் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,60,000 மட்டுமே. இது டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கையை விடவும் 50 சதவீதம் குறைவு.