ஐடி துறையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு புறம் நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை காரணம் காட்டி லேஆஃப் செய்கின்றன. மறுபுறம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அதற்கு ஏற்ப சமீபத்தில் வெளியான அறிக்கை சில சுவாரசிய தகவல்களை வழங்கியுள்ளது.
1 பைனான்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. நல்ல அனுபவம் வாய்ந்த ஜெனரேட்டிவ் AI பயன்படுத்தக்கூடிய இன்ஜினியர்களுக்கு வருடத்திற்கு ரூ.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் நிறுவனங்களில் பணி புரியும் CEO-க்கள் மற்றும் நிறுவனர்கள் போன்றவர்களுக்கே இந்த பிரம்மாண்டமான சம்பள பேக்கேஜுகள் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது AI தொழில்நுட்பம் ஒரு சில திறமை வாய்ந்த இளம் ஊழியர்களுக்கு சாதகமாய் மாறியுள்ளது.
GCC-களின் வருகையும் இந்த சம்பள உயர்வுக்கு ஒரு காரணம். ஏனெனில் வெளிநாட்டு நிறுவனங்கள் திடீரென இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. மேலும் இந்நிறுவனங்கள் இங்குள்ள பணியாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஐடி நிறுவனங்களை விட 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் சம்பளத்தை வழங்குகின்றன. ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் சார்ந்த பணிகளாக இருந்தால் 30 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் ஊதியம் வழங்கப்படுகின்றன.

2026-ஆம் ஆண்டின், 1 பைனான்ஸ் குளோபல் எக்கானமிக் அவுட்லுக் ரிப்போர்ட் வெளியான பிறகு, AI சார்ந்த வேலைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் பாரம்பரிய ஐடி வேலைகளை விட AI சார்ந்த வேலைகளுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த GCC நிறுவனங்கள் சுமார் 10.4 மில்லியன் வேலை வாய்ப்புகளை வழங்கி இருப்பதாகவும், இதில் திறமையான ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அறிக்கையின் படி ஜெனரேட்டிவ் AI அதிக ஊதியத்தை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இதில் 8 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த சீனியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.60 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறதாம். அதே சமயம் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் வருடத்திற்கு ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.
இதில் ஜெனரேட்டிவ் AI தெரிந்த ஃபிரெஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் கிடைப்பதாகவும் தெரியவந்துள்ளது. இன்னும் பல ஐடி ஊழியர்கள், நிறுவனங்களில் இணைந்தவுடன் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை மட்டுமே சம்பளம் பெற்று வருகின்றனர். அத்தகைய சூழலில் மாதத்திற்கு ரூ.1 லட்சம் என்பது உண்மையிலேயே அதிகபட்ச சம்பளம் தான்.
அதற்கு அடுத்தபடியாக சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் இருக்கின்றனர். இதில் 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.55 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. அதே நேரம் கிளவுட் கம்ப்யூட்டிங் தெரிந்தவர்கள் ரூ.45 லட்சமும், டேட்டா இன்ஜினியர்கள் ரூ.42 லட்சமும் சம்பாதிக்கின்றனர். லோ கோட் டெவலப்மெண்ட் இன்ஜினியர்கள் ரூ.30 லட்சம் வரை வருமானம் பெறுகின்றனர்.
ஜிசிசி நிறுவனங்களின் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 20 லட்சத்திலிருந்து 28 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிசிசி நிறுவனங்கள் 2019-ஆம் நிதியாண்டு வரை AI மற்றும் மெஷின் லேர்னிங்கை 65 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆனால் 2024-ஆம் நிதியாண்டில் இந்த விகிதம் 86 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவும் வேலை வாய்ப்பு அதிகரிப்பு மற்றும் சம்பள உயர்வுக்கு காரணமாக மாறியிருக்கிறது.
அறிக்கையில் எப்படி AI சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளதோ? அதேபோல அடுத்த 5 ஆண்டுகளுக்குள் AI தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக 20 லட்சம் IT வேலைகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஐடி நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படுபவர்கள் முறையான பயிற்சி மற்றும் முயற்சி இருந்தால் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ், கிளவுட் ஆர்கிடெக்சர், சைபர் செக்யூரிட்டி ஆகிய துறைகளில் தங்களுக்கென ஒரு இடத்தை கண்டிப்பாக பிடித்துக் கொள்ள முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications