வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல பழமையான விஷயங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. பழமையான கோவில்கள், பழமையான கட்டிடங்கள் உள்பட பல பழமையான விஷயங்கள் இருக்கும் சென்னையில் ஒரு பழமையான பேக்கரியும் உள்ளது என்பது பலர் அறியாத செய்தியாகும்.
இரண்டு உலகப்போர்களை கண்ட இந்த பேக்கரி தற்போதும் சென்னையின் முன்னணி பேக்கரிகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது இதன் சிறப்பாகும்.
ஸ்மித் ஃபீல்ட் பேக்கரி என்று கூறப்படும் இந்த பேக்கரி பெரம்பூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த பேக்கரியின் சிறப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
ஸ்மித் ஃபீல்ட் பேக்கரி
1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னையில் உள்ள ஸ்மித் ஃபீல்ட் பேக்கரி 137 ஆண்டுகள் கடந்தாலும் வாடிக்கையாளர்களை இன்னும் ஈர்த்து வருகிறது. பல வருடங்கள் கடந்தும், பேக்கரியின் கேக்குகள், ரொட்டிகள் மற்றும் பிற தயாரிப்புகள் இன்னும் சென்னை மக்களின் விருப்பத்திற்குரிய உணவாக உள்ளது. 137 ஆண்டுகளை கடந்தபோதிலும் இந்த பேக்கரி சென்னை மக்களின் முக்கிய தேவையாக உள்ளது. இந்த பேக்கரியின் ரொட்டி துண்டுகள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்.
பொன்னுசாமி நாயக்கர்
மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி நாயக்கர் என்பவர் புரசைவாக்கத்தில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஸ்மித் ஃபீல்ட் பேக்கரி என்ற பேக்கரியை கடந்த 1885ஆம் ஆண்டு தொடங்கினார். அதுமுதல் கடந்த 137 ஆண்டுகளாக அவருடைய தலைமுறையினர் ருசி மாறாமல் சென்னை மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். ஸ்மித் ஃபீல்ட் பேக்கரியின் நான்காம் தலைமுறை உரிமையாளர் வெங்கடேஷ் சங்கர் தற்போது இந்த பேக்கரியை நிர்வகித்து வருகிறார்.
நான்காம் தலைமுறை உரிமையாளர்
ஸ்மித் ஃபீல்ட் பேக்கரியின் நான்காம் தலைமுறை உரிமையாளர் வெங்கடேஷ் சங்கர் தனது பேக்கரி குறித்து கூறுகையில், நாங்கள் நிர்ணயித்த தரத்தை யாராலும் வெல்ல முடியாது. எங்களது விசுவாசமான வாடிக்கையாளர்கள் எங்களிடம் தொடர்ந்து வருவதற்கு எங்கள் தயாரிப்புகளின் தரமே காரணம்' என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரொட்டித் துண்டுகள்
என் தாத்தா, என் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியோர்களுக்கு பிறகு இந்த பேக்கரியை தற்போது நான் நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு சில பொருட்களையே வைத்திருந்தோம். குறிப்பாக ரொட்டித் துண்டுகள், ரொட்டிகள் ஆகியவை தரமுடன் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் ஸ்பெஷலாக இங்கிலீஷ் மேரி மற்றும் போர்பன்கள் உள்ளன என்றும் வெங்கடேஷ் சங்கர் தெரிவித்தார்.
போர் காலத்தில் உணவு
இரண்டாம் உலகப்போர் காலத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவியதாக எனது தந்தை என்னிடம் கூறுவார். அரசு அதிகாரிகள் ரொட்டிக்கான கூப்பன்களை விநியோகித்து அந்த கூப்பன்களை கொண்டு வந்து மக்கள் எங்கள் கடையில் ரொட்டியை வாங்குவார்கள். அதேபோல் ரொட்டிக்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கு அரசு எங்களுக்கு கூப்பன்கள் தரும் என்று தனது நிறுவனத்தின் பெருமையை அவர் சுட்டிக்காட்டினார்.
ரொட்டியின் தரம்
ஸ்மித் ஃபீல்ட் பேக்கரியின் தரம் குறித்து விளக்கிய வெங்கடேஷ், 'உள்ளூரில் உள்ள எவரும் எங்கள் ரொட்டித் துண்டுகளுக்கு இணையான தரத்தை தர முடியாது என்றும், நாங்கள் தயாரிக்கும் ரொட்டியின் தரத்தை யாராலும் வெல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 137 ஆண்டுகளாக ஒரே தரத்தில் சுவை மாறாமல் சென்னை மக்களை திருப்தி செய்து வருகிறோம் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்தார். உலகப் போர்களின் போது சேவை செய்த எங்கள் பேக்கரி இன்னும் சென்னை மக்களுக்கு தேவையான ஒன்றாக இருப்பதில் எங்களுக்கு பெருமை என்றும் அவர் தெரிவித்தார்.
விரிவுபடுத்த திட்டமா?
தற்போது எங்கள் பேக்கரியை விரிவுபடுத்தும் திட்டம் என்னிடம் இல்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு, நான் போதுமான மார்க்கெட்டிங் செய்யவும், இரண்டாவது யூனிட்டிற்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று திருப்தி அடைந்தால் ஒருவேளை விரிவுபடுத்தலாம் என்று அவர் மேலும் கூறினார்.
கடை பெயரின் முக்கியத்துவம்
கடை பெயரின் முக்கியத்துவம் வெங்கடேஷ் கூறியபோது, 'கடை பெயரின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் எனக்கு தெரியாது என்றும், அநேகமாக அந்த காலகட்டத்தில் ஆங்கிலம் பேசும் கூட்டத்தை கவரும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications