கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து கொண்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்ததால் பல புதிய யோசனைகளை கண்டுபிடித்தனர் என்பதை அவ்வப்போது பார்த்தோம்.
அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊரடங்கு நேரத்தில் ஒரு சொந்த விமானத்தை உருவாக்கி உள்ளனர். அது எப்படி சாத்தியமானது என்பதை பார்ப்போம்.
இந்திய வம்சாவளி குடும்பம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஊரடங்கில் ஓய்வு நேரம் நிறைய கிடைத்ததால் மக்கள் பல்வேறு வகை யோசனைகளை செயல்படுத்தினர். அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய வம்சாவளி குடும்பம் சொந்த விமானத்தையே ஊரடங்கு காலத்தில் உருவாக்கி அதில் தற்போது பயணம் செய்து வருகிறது.
ஊரடங்கில் சொந்த விமானம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் மற்றும் அவரது மனைவி அபிலாஷா தம்பதிக்கு தாரா மற்றும் தியா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்த விமானம் வாங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவு இருந்தது. இந்த கனவை நனவாக்க இந்த குடும்பத்தினர் ஊரடங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி கொண்டனர்.
விமானி
அசோக் ஒரு பயிற்சி பெற்ற விமானி என்பதால் ஊரடங்கு நேரத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் தனது குடும்பத்திற்காக ஒரு விமானத்தை உருவாக்க முடிவு செய்தார். விமானம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களை அவர் வாங்கினார். யூடியூப் வீடியோ பார்ப்பது சில குறிப்புகளையும், விமானம் செய்வதற்கு தேவையான மற்றா குறிப்புகளையும் ஒருங்கிணைத்தார். இதனையடுத்து அவரது தீவிர முயற்சியால் ஒரு முழு விமானத்தை அவர் இரண்டு ஆண்டுகளில் தனது குடும்பத்தினர்களின் உதவியால் செய்து முடித்து உள்ளார்.
எவ்வளவு செலவு?
இந்த விமானத்தை உருவாக்குவதற்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1.8 கோடி செலவானதாக அசோக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த விமானத்தில் தான் தற்போது அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஐரோப்பா முழுவதும் சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 இருக்கைகள் கொண்ட விமானம்
ஆரம்பத்தில் நாங்கள் இரண்டு சிறிய இருக்கைகள் கொண்ட விமானத்தை வாடகைக்கு சுற்றி வந்தோம் என்றும் ஆனால் 2 குழந்தைகள் எங்களுக்கு ஆனவுடன் 4 இருக்கைகள் கொண்ட விமானம் தேவைப்பட்டது என்றும் அந்த விமானத்தை வாங்குவதே எனது கனவாக இருந்தது என்றும் அசோக் பேட்டியில் கூறியுள்ளார்.
நனவான கனவு
ஊரடங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் முதல் ஊரடங்கின்போது நாங்கள் பணத்தை சேமிக்க தொடங்கினோம். அதன் பிறகு இரண்டாவது ஊரடங்கின்போது விமானத்தை தயாரிக்கும் முயற்சியை எடுத்தோம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தங்களது சொந்த விமானம் என்ற கனவு நனவாகி உள்ளதாகவும் இந்த விமானத்தில் நாங்கள் குடும்பத்துடன் ஐரோப்பாவை சுற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.