இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்றே குறையத் தொடங்கியிருந்தாலும், அதனால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? ஈடுகட்ட முடியாத இழப்புகளுக்கு மத்தியில் வாடும் மக்கள், மறுபுறம் வேலையிழப்பு, பணி நீக்கம், சம்பள குறைப்பு என படாதபாடு பட்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் இருக்கும் வேலை இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும். இந்த மாத சம்பளம் வருமா? வராதா? அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்தவர்கள் ஏராளம்.
இப்படி ஒவ்வொருபுறமும் மத்தளம் போல அடி வாங்கி வந்த மக்கள் ஒரு புறம், மறுபுறம் வழக்கத்திற்கு மாறாக சம்பள உயர்வு, பதவி உயர்வு என ஒரு துறையினர் மட்டும் குதூகலத்தில் இருந்தனர்.
வரலாறு காணாத சரிவில் ஜிடிபி
கொரோனா காலத்தில் ஜிடிபியானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது. பல துறைகள் அதல பாதாளம் நோக்கி சென்றன. பல லட்சம் பேர் வேலையிழந்தனர். வாழ்வாதாரத்தினை இழந்தனர். வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
மாஸ் காட்டிய ஐடி துறை
அது ஐடி துறை தான். ஏனெனில் கொரோனாவுக்கு முன்பை விட, கடந்த நிதியாண்டில் சில ஐடி நிறுவனங்கள் மாஸ் காட்டியுள்ளன. அவர்கள் முன்பை விட சிறந்த வருவாயினை காட்டியுள்ளனர். பல புதிய ஒப்பந்தங்களை போட்டுள்ளனர். சில நிறுவனங்களில் வருவாய் வழக்கத்திற்கு மாறாக புதிய உச்சத்தினை எட்டியுள்ளன.
Array
இந்த உற்சாகத்திலேயே ஊழியர்களையும் சம்பள உயர்வு, பதவி உயர்வு என திகைப்பில் ஆழ்த்தியுள்ளன சில நிறுவனங்கள். சில முன்னணி ஐடி நிறுவனங்கள் ஒரு ஆண்டில் இருமுறை சம்பள உயர்வையும் கொடுத்தன. இதற்கிடையில் புதிய பணியமர்த்தல் என்பதும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்திலும் வளர்ச்சி
இது குறித்து நாஸ்காம் சமீபத்திய அறிக்கையில், ஐடி துறையானது 2.5 லட்சம் ஊழியர்களை மேம்படுத்தியுள்ளதாகவும், 40,000 பேருக்கும் அதிகமானவர்களை டிஜிட்டல் திறன் மிக்க திறமைசாலிகளாக மாற்றி பணியமர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆக கொரோனா என்னும் இருண்டகாலத்திற்கு மத்தியிலும் வலுவான வளர்ச்சியினை கண்ட துறைகளில் ஐடி துறை இருந்தது என கூறியுள்ளது.
பிரம்மாண்ட வளர்ச்சி காணும்
இதற்கிடையில் 2025ம் ஆண்டில் ஐடி துறையானது 300 - 350 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட, பிரம்மாண்ட வளர்ச்சி காணும் வலுவான துறையாகவும் மேம்படும் என நாஸ்காம் கூறியுள்ளது. இதே காலகட்டத்தில் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக, பல துறை சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டு வந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் மீள்ச்சி கண்டுள்ளன.
தேவை மேம்படும்
நாளுக்கு நாள் ஐடி துறையின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளிலும் ஐடி துறையானது நல்ல வளர்ச்சியினை காணலாம். இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் இருந்து வந்தாலும், ஐடி துறையினர் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் சூழல் இருந்து வருகின்றது. சில ஐடி நிறுவனங்கள் பிளெக்ஸி முறைக்கு மாறி வருகின்றன.
செலவுகள் குறையும்
ஐடி துறையில் பரவி வரும் இந்த பிளெக்ஸி கலாச்சாரத்தினால், நிறுவனங்களுக்கான செலவினங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி ஐடி நிறுவனங்களின் நிலவரம்
டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட மூன்று முன்னணி ஐடி நிறுவனங்களும், முந்தைய ஆண்டினை காட்டிலும் மாஸ் வருவாயினை காட்டியுள்ளன. குறிப்பாக இன்ஃபோசிஸ் கடந்த நிதியாண்டில் 19,351 கோடி ரூபாய் லாபத்தினையும், இது முந்தைய ஆண்டில் 16,594 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மாஸ் காட்டும் டிசிஸ், விப்ரோ
இதே டிசிஎஸ் நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த நிதியாண்டில் 33,388 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 32,340 கோடி ரூபாயாக இருந்தது.
விப்ரோ நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த நிதியாண்டில் 10,794.6 கோடி ரூபாயாகவும், முந்தைய ஆண்டில் 9,721.8 கோடி ரூபாயாகவும் இருந்தது.
தூள் கிளப்பிய சம்பள உயர்வு
அசெஞ்சர், ஐபிஎம், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை வழங்கின. இதில் சில இரு முறை சம்பள உயர்வினை வழங்கின. இந்த காலகட்டத்தில் பல ஆயிரம் பேருக்கு பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது.
ஒர்க் ஃப்ரம் ஹோம்
கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனங்கள் அனுமதித்தன. இது கடந்த ஆண்டில் நிலவி வந்த நெருக்கடியான நிலையிலும், ஐடி உழியர்கள் மட்டும் வழக்கம்போல பணிபுரிய வழிவகுத்தது. இதுவே ஐடி துறையினருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது.
இதே நிலை தொடரும்
மேலும் இது மற்ற துறைகளிலும் தேவையை அதிகரிக்க வழிவகுத்தது. இதனால் ஐடி துறையில் நிலவி வரும் இந்த வளர்ச்சி விகிதம் இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். மொத்தத்தில் நிலவி வந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் ஐடி துறை மட்டும் மாஸ் காட்டியது மறுக்க முடியாத உண்மையே.