பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் வேலை, கைநிறைய சம்பளம். ஆனால் எனக்கு இந்த வேலை வேண்டாம் நான் சுய தொழில் செய்யப்போகிறேன் என யாராவது கூறினால் எதிரில் இருப்பவர்கள் எள்ளி நகையாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த உதயகுமார் இஸ்ரோ வேலையை விட்டுவிட்டு தற்போது சுய தொழிலில் முன்னேறி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிலை நடத்தி வருகிறார்.
அண்மையில் தொழில் முனைவோரான ராமபத்ரன் சுந்தரம் என்பவர் கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்துள்ளார். அப்போது கால் டாக்ஸி ஓட்டுனரிடம் அவர் நடத்திய கலந்துரையாடலை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய கார் ஓட்டுநரான உதயகுமார், இஸ்ரோவின் முன்னாள் ஊழியர் என்பதை தெரிந்து தான் ஆச்சரியமடைந்ததாக கூறியுள்ளார். உதயகுமார் புள்ளியியல் பிரிவில் பிஹெச்டி முடித்து இஸ்ரோவில் வேலை செய்து வந்தவர்.
சொந்தமாக டாக்ஸி நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதற்காக அந்த வேலையை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு முன்னேறி தற்போது 2 கோடி ரூபாய் மதிப்பிலான டாக்ஸி சேவை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இவருடைய வாழ்க்கை பல வழிகளில் என்னை ஊக்குவிக்கிறது என ராமபத்ரன் சுந்தரம் தன்னுடைய போஸ்டில் சுட்டிக் காட்டியுள்ளார்.
உதயகுமார் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக கடினமாக படித்த அவர் புள்ளியியல் துறையில் பிஹெச்டி முடித்து இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருட்களின் அடர்த்தியை கணக்கிட்டு கூறுவது தான் இவரது வேலை. பல சவால்களுக்கு மத்தியில் இஸ்ரோவில் சிறப்பாக பணி செய்து வந்த இவர் திடீரென அந்த வேலையை விட்டு இருக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களின் உதவியோடு பெற்றோர் சுகுமாரன் மற்றும் துளசியின் பெயரில் எஸ் டி கேப்ஸ் (ST CABS) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தற்போது எஸ் டி கேப்ஸ் நிறுவனத்தில் 37 கார்கள் உள்ளன. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. ஆனால் அது மட்டுமே அல்ல இவர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுனர்களை வெறும் ஊழியர்களாக நடத்தாமல் வருமானத்தில் குறிப்பிட்ட பங்குகளை அவர்களுக்கு வழங்குகிறார். அதாவது 70% பங்குகள் ஓட்டுநர்களுக்கு செல்கிறதாம்.
இந்த தலைமை பண்பு ஏராளமான ஓட்டுனர்களை தொடர்ந்து இங்கேயே பணிபுரிய செய்தது மட்டுமில்லாமல் தாங்களாகவே வாடிக்கையாளர்களையும் அழைத்து வரும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இது தவிர ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு தேவையான வீட்டு வசதி, குழந்தைகளுக்கு தேவையான கல்வி கட்டணங்கள் உள்ளிட்ட வசதிகளையும் இவர் செய்து வருகிறாராம். உதயகுமார் தொழிலை நடத்தும் விதம், ஊழியர்களை மதிக்கும் விதம் ஒவ்வொரு தொழில் முனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று எனக் வீரபத்ரன் பாராட்டியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications