அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு சீனாவின் பையிட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலியில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாக அறிவித்து டிக்டாக் பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு, இந்நிறுவனத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் டிக்டாக் சொத்துக்கள் மற்றும் ஆப்ரேஷன்ஸ்களை விற்பனை செய்ய 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு இதன் பின் 15 மற்றும் 7 நாள் என இரண்டு முறை கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுக் கடைசி நாளாக இருந்து வெள்ளிக்கிழமை நவம்பர் 4.
ஆனால் வெள்ளிக்கிழமை முடியும் வரையில் எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் பிரச்சனை மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்டாக் செயலி
அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக் குழு டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பையிட்டான்ஸ்-க்கு அமெரிக்காவில் இருக்கும் தனது சொத்துக்கள் மற்றும் ஆப்ரேஷன்ஸ்களை அமெரிக்க நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க நவம்பர் 4 இரவு வரையில் காலக்கெடு விதித்திருந்த நிலையில் சீன நிறுவனமான பையிட்டான்ஸ் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை.
பையிட்டான்ஸ் மீண்டும் கால நீட்டிப்பு கேட்ட நிலையில் அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பையிட்டான்ஸ்
அமெரிக்க மக்கள் தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்தி வரும் இந்த நிலையிலும், இந்தச் சேவை 100% முடக்கப்படக் கூடாது என்பதற்காக அமெரிக்கா அரசும் பையிட்டான்ஸ் நிர்வாகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், டிக்டாக் செயலி குறித்து அமெரிக்க அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சீனா செயலியான பையிட் டான்ஸ்-ன் டிக்டாக் செயலிக்குச் சாதகமாகத் தடை செய்யக் கூடாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், டிக்டாக் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்து
டிக்டாக் செயலி மக்களின் தனிநபர் பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதை முன்வைத்துத் தான் அமெரிக்கா இந்நிறுவனத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இந்தச் செயலி சீன அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு முக்கியச் செயலி என டிரம்ப் அரசு கூறியுள்ளது.
சீன அரசுடன் தொடர்பு
டிரம்ப் அரசின் இந்தக் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பல முறை மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது செயலி எந்த வகையிலும் சீன அரசுடன் தொடர்பில் இல்லை என்றும், டிக்டாக் செயலியின் சர்வர் அனைத்தும் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கிறது எனப் பையிட்டான்ஸ் தெரிவித்துள்ளது.