நம் நாட்டில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. வங்கி கணக்கு திறப்பது முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் முதன்மை ஆவணமாகத் திகழ்கிறது. இவ்வளவு முக்கியமான கார்டில் மாற்றம் வரப்போகிறது என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு காரணமே காட்டுத் தீயாய்ப் பரவிய ஒரு செய்தி தான்.

அது என்னவென்றால் இனிவரும் காலங்களில் ஆதார் கார்டு மாறப்போகிறது. அதில் இனி உங்கள் முகமும், QR கோட் மட்டும் தான் இருக்கும் என்ற செய்தி வெளியானது. இந்த செய்தி உண்மையா? இது தொடர்பாக மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் & இன்பர்மேஷன் டெக்னாலஜி (MeitY) என்ன சொல்கிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அனைத்தும் வதந்தி: புதிய தோற்றத்தில் ஆதார் கார்டு வரப்போகிறது என்ற செய்தியை MeitY முற்றிலுமாக மறுத்துள்ளது. புதிய ஆதார் கார்டில் ஒவ்வொரு பயனரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் குறியீடு மட்டுமே இருக்கும் என்று பல செய்திகள் பரவியது. இந்நிலையில் அந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அடையாளத் திருட்டு மற்றும் டேட்டா கசிவைத் தடுப்பதற்காக இந்த மாற்றங்களை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மக்கள் அனைவரும் இதை நம்பத் தொடங்கினர். இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை என்று அரசு தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவை மக்கள் மனதில் தேவையற்ற குழப்பத்தை உண்டாக்க பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள ஆதார் கார்டில் எப்படி ஒருவரின் புகைப்படம், முகவரி, பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் நம்பர், க்யூ ஆர் கோடு ஆகியவை இருக்கிறதோ? அதே போல தான் தொடர்ந்து இருக்கும். இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே பொதுமக்கள் அத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம். UIDAI இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மற்றும் அரசு செய்தி நிறுவனமான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (PIB) வாயிலாக வெளியிடப்படும் அறிவிப்புகள் மூலம் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றாக ஆதாரைப் பயன்படுத்தலாமா?: இன்னும் பல இடங்களில் பிறப்புச் சான்றாக ஆதாரைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஆதார் கார்டை இனி பிறந்த தேதிக்கு ஆதாரமாக பயன்படுத்த முடியாது. இது ஒரு அடையாளச் சான்றாகவே செயல்படும். அதாவது நீங்கள் யார் என்பதை தெரிவிப்பதற்கான ஒரு அடையாள அட்டையாக மட்டுமே ஆதார் கார்டு இருக்கும்.
2016-ஆம் ஆண்டின் ஆதார் சட்டப்படி பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் கார்டு கருதப்படாது என UIDAI தெளிவாகக் கூறியுள்ளது. எனவே நீங்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்தாலும் வேறு ஏதேனும் விஷயங்களுக்காக பயன்படுத்தினாலும் பிறப்புச் சான்றிதழைத் தான் பயன்படுத்த வேண்டும். வாட்ஸ்அப்பில் வரும் அனைத்து மெசேஜ்களும் எப்பொழுதும் உண்மையாக இருக்காது என்பதற்கு இதுவே சாட்சி.
எனவே ஆதார் போன்ற அரசு ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் வருவதாக இருந்தால் அது தொடர்பான செய்திகள் அதிகாரப்பூர்வ பக்கங்களின் மூலம் வெளியாகும். அது வரையில் இது போன்ற செய்திகளை மக்கள் நம்பாமல் இருப்பது நல்லது!


Click it and Unblock the Notifications