தமிழ்நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இதேவேளையில் விவசாய உற்பத்தி பல்வேறு காரணங்களாகக் குறைந்து வருகிறது.
இந்த இரு பிரச்சனைகளையும் ஓரு சேர தீர்க்கும் முயற்சியில் ஒரு படியாகத் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய விருப்பம் கொண்ட இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க விவசாயத் துறை பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிடிஆர்-ன் பொதுப் பட்ஜெட்
பிடிஆர் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில் பல தொழில் பூங்கா மற்றும் ஐடி பார்க் அமைப்பது மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், இதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
விவசாயப் பட்ஜெட்
இதேபோல் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் விவசாயத் துறையில் இளைஞர்களின் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் சில முக்கியமான திட்டங்களை விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் இளைஞர்கள் வேலை செய்வதைத் தாண்டி, இளைஞர்கள் வேலை தருபவர்களாக மாறவேண்டும் என்று எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசினார். விவசாயத் துறையில் இளைஞர்கள் நேரடியாக வருவது கடினம் என்பது தெரியும். இதற்காக விவசாயப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார் .
வேளாண் பயிற்சிகள்
முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும், இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்தத் திட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.
இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கும் இந்தத் திட்டத்திற்குச் சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.
விவசாயத்தில் இளைஞர்கள்
இளைஞர்களுக்கு விவசாய பயிற்சி அளிப்பதன் மூலம் இன்று விவசாய உற்பத்தியை பெருக்கப் பல டெக் சேவைகள் இருக்கும் நிலையில், அதனைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் விவசாயத் துறையில் இளைஞர்கள் அதிகளவில் வருவதன் மூலம் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை பெரிய அளவில் மேம்படும்.
வேளாண் அருங்காட்சியகம்
விவசாயத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் விதித்தாக சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.
விவசாயக் கருவிகளுக்கான மானியங்கள்
விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வாங்க 52.02 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதேபோல் சூரிய சக்தியால் இயக்கும் 5000 பம்புசெட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்திற்கான மானியத் திட்டம் 114.68 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.