தமிழகச் சட்டசபையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்துள்ள முழு முதல் பட்ஜெட் ஆகும்.
2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையும் கடந்த ஆண்டை போலவே டிஜிட்டல் பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நிதி பற்றாக்குறை அளவு
தமிழ்நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு இந்த ஆண்டு 4.61 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகச் சரியும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார். தமிழக அரசின் சிறப்பான நிர்வாகத் திறன் வாயிலாகவே இது சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
சுமை
மின்சார வாரிய இழப்பீடுகள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, கடன் தள்ளுபடி ஆகியவற்றின் மூலம் தமிழக அரசு அடுத்த நிதியாண்டியில் கூடுதல் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
நிலையற்ற தன்மை
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகப் பொருளாதாரம் பாதிப்பு, சப்ளை செயின் பாதிப்பு, நுகர்வோர் சந்தை சரிவு ஆகியவற்றின் மூலம் வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும் எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி வருமானம்
மேலும் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் வரி வருமானம் தொடர்ந்து பாதிப்பு அடைந்து வருகிறது. மேலும் வரி வருமான பகிர்வில் தொடர்ந்து அதிகப்படியான வித்தியாசம் உருவாகி வருகிறது என நிதியமைச்சர் பேசினார்.
வருவாய் பற்றாக்குறை
மேலும் 2022-23ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 7000 கோடி ரூபாய் வரையில் குறைய வாய்ப்பு உள்ளது என நிதியமைச்சர் கூறினார். இதோடு 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது.


Click it and Unblock the Notifications