தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டினை முதல் முறையாக திமுக அரசு தாக்கல் செய்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அந்த வகையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற்துறை என பல முக்கிய துறைகளிலும் கவனம் செலுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் தகவல் சென்டர்கள்
இதற்கிடையில் திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மொபைல் தகவல் சென்டர்கள் (Mobile information centres) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்டர்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவால்களுக்கு மத்தியில் தவிப்பு
இது கொரோனா காலகட்டத்தில் மக்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில், பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். குறிப்பாக புலம் பெயர் மக்கள் செய்வதறியாது தவித்தனர். அந்த சமயத்தில் போக்குவரத்து வசதிகள் இன்மையால், நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தவர்கள் ஏராளம்.
அடிப்படை தேவைகள் கூட கிடைக்கவில்லை
அதுமட்டும் அல்ல, சரியான உணவின்மை, தங்குவதற்கு சரியான இருப்பிடம் இல்லாமை, சம்பளம் கிடைக்காததால் அடிப்படை வாழ்வாதரத்திற்கே கஷ்டப்பட்டனர். இந்த நிலையில் அரசின் உதவியுடன் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
பயன்பாடு என்ன
குறிப்பாக புலம் பெயர் மக்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் போன்ற நகரங்களில், மக்கள் ரயில் நிலையங்களில் பல நாட்கள் காத்திருந்தது மறக்க முடியா சம்பவங்களே. ஆக அரசு அதனை மனதில் கொண்டு இத்தகைய மொபைல் செண்டர்களை அமைக்க நினைத்திருக்கலாம். எனினும் இது எதற்காக? இது எந்தளவுக்கு அவர்களுக்கு பயனளிக்கும் என்பது பயன்பாட்டுக்கு வரும் போது தான் தெரியவரும்.