கொரோனா தொற்று எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதுமட்டும் அல்லாமல் இளம் தலைமுறையினர் 2வது அலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே மாநில அரசுகள் கடுமையாகக் கட்டுப்பாடுகளை விதித்துத் தொற்றுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் டெக் தலைநகரமாக விளங்கும் பெங்களூரில் இருக்கும் வெளிமாநிலம் மற்றும் வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளனர். இதனால் பெங்களூரில் பல ஆயிரம் வீடுகள் மீண்டும் காலியாகியுள்ளது.
கொரோனா 2வது அலை
2020 மார்ச் லாக்டவுனில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில் கொரோனா 2வது அலை இந்தியாவைப் பெரிய அளவில் தாக்கி வருகிறது என்றால் மிகையில்லை. 2020ல் சொந்த ஊருக்குச் சென்ற பல திரும்பவும் வேலை, கல்வி, வர்த்தகம் எனப் பல காரணங்களுக்காகப் பெரு நகரங்களுக்கு ஜனவரி முதல் திரும்பினர்.
கொரோனா தொற்று
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா தொற்று மக்களைப் பயமுறுத்தும் நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடிவு செய்து சொந்த ஊருக்கு மீண்டும் செல்ல துவங்கியுள்ளனர். இதற்கு ஏற்றார் போல் அரசும், நிறுவனங்களும் வீட்டில் இருந்த வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
காலியாகும் வீடுகள்
இதன் காரணமாக 2020 ஏப்ரல், மே மாதம் ஏற்பட்டதைப் போலவே பெங்களூரின் பல பகுதிகளில் அதிகளவிலான வீடுகள் காலியாகி உள்ளது. திரும்பும் பக்கம் எல்லாம் To-let பலகை தென்படுகிறது. மேலும் பெங்களூரில் தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிறிய வியாபாரிகளும் வர்த்தகத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகள்
கல்லூரிகள், பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் வெளிமாநில மற்றும் வெளியூர் மாணவர்களுக்கும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதால் பெங்களூர் தற்போது வெறிச்சோடி உள்ளது. ஆனாலும் சில்க் போர்ட்டில் டிராபிக் குறையவில்லை.