இந்திய நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டதோடு, டோல் பிளாசாவில் அனைத்து வழித்தடமும் பாஸ்டேக் வழித்தடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் டோல் பிளாசாவில் வசூல் அளவு அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் டோல் பிளாசா மூலம் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நெடுஞ்சாலைத் துறை இந்த வாரம் முழுவதும் சராசரியாகத் தினமும் 100 கோடி ரூபாய் அளவில் கட்டணத்தைப் பாஸ்டேக் மூலம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் 25ஆம் தேதி அதிகப்படியாக 64.5 லட்ச பரிமாற்றங்கள் மூலம் 103.94 கோடி ரூபாய் அளவிலான தொகை வசூல் செய்யப்பட்டுப் புதிய சாதனை படைத்துள்ளது நெடுஞ்சாலைத் துறை. பாஸ்டேக் பரிமாற்ற முறை நிலையான வேகத்தில் அமலாக்கம் செய்யப்பட்டு தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தப் பாஸ்டேக்முறை அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு எலக்ட்ரானிக் பரிமாற்ற அளவீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் வசூல் அளவில் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் புதிய கட்டுப்பாடு அமலாக்கம் செய்யப்பட்ட 2 வாரத்தில் மட்டும் புதிதாகப் பாஸ்டேக் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் அதிகரித்து, மொத்தம் 2.8 கோடி பாஸ்டேக் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பாஸ்டேக் அமலாக்கம் செய்யப்பட்டது மூலம் டோல் பிளாசாவில் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.