டெல்லி: நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருப்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்றும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த நிலையில் இந்த போராட்டத்தினை வங்கி ஊழியர்கள் கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வங்கி ஊழியர்களின் பல சங்கங்கள் இந்த போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதனால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் இந்த இரண்டு நாள்களும் முடங்கப்படலாம் என்றும், இதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுகிழமையன்றும் வங்கி விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் தடைபடலாம் என்றும் கூறப்படுகிறது.
இவர்களின் முக்கிய கோரிக்கையே நவம்பர் 2017 முதல் சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என்பது தான். ஆக இதுபோல சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் சேர வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
தொழிலாளர் துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களை சமாதானப்படுத்த முயன்றதாகவும், ஆனால் இந்த முயற்சி தோல்வியுற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து AIBEA சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஐபிஏ விரும்பியது. ஆனால் வங்கி நிர்வாக தரப்பில் இது குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லாததால் இந்த போராட்டம் நிச்சயம் நடைபெறும் என்றும் கருதப்படுகிறது.
ஏற்கனவே பல வங்கிகள் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளன. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால், பணிகள் நிச்சயம் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. முன்னதாக ஜனவரி 8ம் தேதியன்று நடைபெற்ற பாரத் பந்திலேயே இந்த வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
வங்கி தொழில் சங்கங்கள் 20% ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், வங்கி நிர்வாகம் 12.5% மேல் செல்ல வாய்ப்பில்லை என்றும், சிறப்பு ஊதியத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தினை நீக்குதல் போன்றவை பிற கோரிக்கைகள் இதில் அடங்கும். கோரிக்கைகள் நிறைவேறுமா, போராட்டம் கைகொடுக்குமா, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.