2020ல் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் முதல் முறையாக இரண்டு காலாண்டுகள் தொடர்ந்து சரிந்து ரெசிஷனுக்குத் தள்ளப்பட்டது. இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்தனர்.
ஆனால் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்திய சந்தையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்த காரணமாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டது. இதனால் சந்தையில் மீண்டும் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது.
இந்நிலையில் 2020ல் அதிகம் லாபம் கொடுத்த டாப் 5 நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அதானி க்ரீன் எனர்ஜி
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பாக இயங்கும் டாப் 100 நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அதானி நிறுவனம் உலகின் மிகப்பெரிய renewable power நிறுவனமாக 2025க்குள் உருவாக வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
2020ல் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் சுமார் 522 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இந்நிறுவனப் பங்கு மதிப்பு 1,036.20 ரூபாய்.
திவிஸ் லேப்ஸ்
2020ஆம் ஆண்டில் திவிஸ் லேப்ஸ் நிறுவனம் சக போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டின் வாயிலாக டிசம்பர் 17ஆம் தேதி நாட்டின் 2வது பெரிய பார்மா நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிறுவனம் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 103 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 3,749.60 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
எல் அண்ட் டி இன்போடெக்
2020ல் ஐடி துறை பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்த நிலையில் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனப் பங்குகள் இந்த ஆண்டு 107 சதவீதம் வளர்ச்சி அடைந்து 3,625 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
அரோபின்டோ பார்மா
கொரோனா காலத்தில் பார்மா நிறுவனங்களின் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில் பெரும்பாலான பார்மா நிறுவனங்கள் அதிக வர்த்தகத்தையும் லாபத்தையும் அடைந்தது. இதன் வாயிலாக அரோபின்டோ பார்மா நிறுவன பங்குகள் இந்த வருடம் 99 சதவீத வளர்ச்சி அடைந்து 909 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாடா கன்ஸ்யூமர்
டாடா குழுமம் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் நுழைய வேண்டும் என்பதற்காக 2020 துவக்கத்தில் இக்குழுமத்தில் இருக்கும் அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்திற்கு மாற்றியது. இதுமட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைய டாடா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றது.
இதன் வாயிலாக டாடா கன்ஸ்யூமர் இந்த வருடம் 88 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 601 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.