இளைஞர்களைப் பொருத்த வரை...
ஒரு நல்ல வங்கி வேலைக்கு போனோமா..
கல்யாணம் முடிந்ததா..
குழந்தை பெற்றோமா..
அப்படியே வேலை பார்க்கும் வங்கியிலேயே கடன் வாங்கி, ஒரு சொந்த வீடு..
குட்டியா ஒரு கார்... என செட்டில் ஆகி விட நினைக்கிறார்கள்.
விளைவு, இந்தியாவில் லட்சக் கணக்கான இளைஞர்கள், தொடர்ந்து ஐபிபிஎஸ் போன்ற வங்கி சார்ந்த பணித் தேர்வுகளை வெறி கொண்டு எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் எதார்த்தத்தில் கதை அப்படி இல்லை. இன்றைய தேதிக்கும், வங்கி வேலையில் அத்தனை பிரச்னைகள் இருக்கிறதாம். தொடர்ந்து லே ஆஃப் நடந்து கொண்டு இருக்கிறதாம். குறிப்பாக வெளிநாட்டில்.
இதுவரை
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், உலகின் பல்வேறு வங்கிகளில் 3,47,220 வங்கி அதிகாரிகள், லே ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறார்களாம். இது வெறும் ஐந்து ஆண்டுக் கணக்கு தான். ஆண்டு வாரியாகப் பார்த்தாலும், தொடர்ந்து ஊழியர்கள், லே ஆஃப் செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு ஆண்டில் எத்தனை பேர் லே ஆஃப் செய்யப்படுகிறார்கள்..?
ஆண்டுக் கணக்கில்
கடந்த 2015-ம் ஆண்டில், உலகின் முக்கியமான 50 வங்கிகள், தங்களின் ஊழியர்களில் 91,448 பேரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதே போல இந்த 2019-ம் ஆண்டிலும் 77,780 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த மொத்த எண்ணிக்கையில் சுமார் 82 சதவிகித லே ஆஃப் ஐரோப்பிய வங்கிகளில் மட்டும் நடந்து இருக்கிறதாம்.
கூடுதலாக இருக்கும்
ஆக கடந்த ஐந்து ஆண்டுகள் + இந்த 2019-ம் ஆண்டில் லே ஆஃப் செய்யப்படுபவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் 4,25,000 பேர் வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை விட, லே ஆஃப் செய்யப்பட்டவர்கள் அல்லது செய்யப்பட இருப்பவர்களின் எண்ணிக்கை, நிச்சயம் கூடுதலாக இருக்கும் என மிண்ட் நிறுவனம் தன் செய்தியில் சொல்லி இருக்கிறது.
காரணங்கள்
பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம், ஏற்றுமதியைச் சார்ந்த பொருளாதாரம். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதால், ஐரோப்பிய பொருளாதாரம் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறதாம். அதோடு, நெகட்டிவ் வட்டி விகிதங்கள் வேறு வங்கியின் லாபத்தை பயங்கரமாக பாதித்துக் கொண்டு இருக்கிறதாம்.
டெக்னாலஜி
அதோடு மிக முக்கியமான விஷயம், இன்று வளர்ந்து இருக்கும் டெக்னாலஜி. ஒரு வங்கி வாடிக்கையாளர், வங்கிக்கே வராமல், ஆன்லைனிலேயே தனக்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடிகிறது. எனவே வங்கி நிர்வாகங்களும், ஆண்டுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து ஒரு நபரை வேலைக்கு வைப்பதை விட, ஒரு கம்ப்யூட்டைரை வாங்கி வைத்து விடுகிறார்கள். ஊழியர்களுக்கு செலவழிப்பதை விட, டெக்லாஜி கட்டமைப்புக்கு கூடுதலாக செலவழிக்க வங்கிகள் தயாராக இருக்கிறார்கள். துவும் லே ஆஃப் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம்.
பொருளாதாரம் எழவில்லை
அமெரிக்காவிலும் இந்த ஏற்றுமதி சிக்கல்கள் இருந்தாலும், அரசின் சில திட்டங்கள் மற்றும் அதிகரித்து வந்த வட்டி விகிதங்களால், அமெரிக்க் பொருளாதாரம் பிழைத்துக் கொண்டது. ஆனால் ஐரோப்பாவில் இந்த கதை பலிக்கவில்லை. வட்டி விகிதங்கள் நெகட்டிவ்வாகவே இருப்பதால் வருமானம் குறைந்து விட்டது. எனவே ஐரோப்பிய வங்கிகள் லாபம் காட்ட, ஊழியர்களை லே ஆஃப் செய்து செலவுகளைக் குறைக்கிறார்கள். சொத்துக்களை விற்று வருமானத்தை அதிகரித்து லாபம் காட்ட முயன்று கொண்டு இருக்கிறார்களாம்.
இந்த வருடம்
இந்த 2019-ம் ஆண்டில், ஜெர்மனியின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான டாயிஷ் வங்கி (Deutshce Bank AG), அதிகபட்சமாக சுமார் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். அதே போல மார்கன் ஸ்டான்லியும் சுமார் 1,500 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்களாம். இவை எல்லாம் 2020-ல் செயல்படுத்தப்படும்.
2020-லும் தொடரும்
மேலும், அடுத்த 2020-ம் ஆண்டிலும், வங்கிகள் தங்கள் ஊழியர்களை லே ஆஃப் செய்ய இருக்கும் அறிவிப்புகள் தொடரும், என சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜூலியஸ் பார் (Julius Baer) நிறுவனம் சொல்லி இருக்கிறது. அதோடு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பான்கோ பில்பாவ் விஸ்கயா அர்ஜெண்டாரியா எஸ் ஏ (Banco Bilbao Vizcaya Argentaria SA) வங்கியும் அடுத்த ஆண்டில், பலரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. ஆக வங்கி வேலையை நம்பி இனி பயன் இல்லை. வேறு ஏதாவது வேலையைப் பார்க்கத் தொடங்குங்கள் மக்களே..!