டெல்லி: இன்னும் சில தினங்களில் பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சற்றே நம்பிக்கையை தரும் விதமாக வந்துள்ளது எனலாம்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 7.7% சரிவினை காணும் என்றாலும், அடுத்த ஆண்டில் வி வடிவ வளர்ச்சி காணும் என்றும் இந்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 11% வளர்ச்சி பெறும் என்றும் ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தின் வளர்ச்சி விகிதமான 11.5%வுடன் இந்த ஆய்வறிக்கை ஒப்பிட்டுள்ளது.
வரி வருவாய் குறையும்
கடந்த ஏப்ரல் - நவம்பர் 2020ல் மொத்த வரி வருவாய் 12.6% குறைந்து 10.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. குறிப்பாக கலால் வரியை தவிர, மற்ற வரிகள் பொருளாதாரம் சரிவினை கண்டுள்ள நிலையில், மற்ற வரிகள் கடிமான சரிவினைக் கண்டுள்ளன. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் டீசலுக்கு விரித்த வரியை அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையில், கலால் வரி வசூல் விகிதம் அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த ஆண்டில் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரி வருவாயை விட, குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விற்பனை இலக்கு
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்ட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக அந்த இலக்கினை அடைய முடியவில்லை. எனினும் வரவிருக்கும் நிதியாண்டில் இந்த பங்கு விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 2.1 லட்சம் கோடி ரூபாயாக பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெறும் 15,220 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது. இலக்கில் வெறும் 7.2% தொகை மட்டுமே திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிதி பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டில் நிச்சயம் நிதி பற்றாக்குறை என்பது இருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக, நாடு தழுவிய லாக்டவுன் பல மாதங்களாக போடப்பட்டத்து. இதனால் தொழில் துறையும் முடங்கியது. இதன் காரணமாக வரி வருவாய் குறைந்தது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் கிடைக்காமல் போனது. இதனால் நிதி பற்றாக்குறை இருக்கலாம் என்றும், இது 2020 - 21ம் நிதியாண்டில் ஜிடிபியில் 3.5% இருக்கலாம் என்றும் கடந்த பட்ஜெட்டில் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் தற்போது இருமடங்கு அதிகரித்து, ஜிடிபியில் 7% ஆக இருக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேவையை அதிகரிக்க வேண்டும்
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இரண்டாம் பாதியில் இருந்து மீண்டு வருகின்றது. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையில் எதிரொலியினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் நுகர்வினைக் அதிகரிக்கும் விதமாக, அரசு நிதி நிலையை நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசு தேவையை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய பொருளாதாரம் 29% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இரண்டாவது பாதியில் 0.8% வீழ்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது. அதோடு ஆண்டு முழுவதும் முதலீடு மற்றும் தனியார் நுகர்வு, வேலைகளை உருவாக்குவதற்கான பொருளாதாரத்தின் திறன் குறைவாகவே உள்ளது.
விவசாயத்துறையில் வளர்ச்சி
முக்கிய துறைகள் இந்த ஆண்டில் வளர்ச்சி காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விவசாயத்துறை மட்டுமே 3.4% வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருடா வருடம் விவசாய துறையின் பங்கு ஜிடிபியில் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு சற்று அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 2019 - 20ம் நிதியாண்டில் 14.7% ஆக இருந்தது. ஆனால் இது 2020 - 21ம் நிதியாண்டில் மற்ற முக்கிய துறைகள் சரிவினை காணலாம் என்றாலும், விவசாய துறை 16.3% ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வசூல் அதிகரிப்பு
ஜிஎஸ்டி வரி வசூல் விகிதமும் இரண்டாம் பாதியிலும் மீண்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 2019வுடன் ஒப்பிடும்போது 12% அதிகமாகும். இதனையடுத்து இந்த ஆய்வறிக்கையில் வெளியான மற்றொரு அறிவிப்பு, நடப்பு கணக்கு உபரி விகிதம் அதிகரிக்கலாம் என்பது தான். இது 17 ஆண்டுகளில் முதல் முறையாக உபரியினை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.