கொரோனா காரணமாக 2020 மிகவும் மோசமான காலமாக அமைந்துள்ள நிலையில், பல முன்னணி வர்த்தகத் துறைகள் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு வியப்பு அடையும் அளவிற்கு உயர்ந்துள்ளது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அதிலும் முக்கியமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
உலக நாடுகள் மத்தியில் அதிகளவில் பணக்காரர்களை உருவாக்கும் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை அமெரிக்கா மற்றும் சீனா பெற்றுள்ள நிலையில் 3வது இடத்தை இந்தியா பிடித்து அசத்தியுள்ளதாக ஹூரன் ரிச் லிஸ்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 2020ல் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்புச் சரிந்தாலும், இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வைத்திருப்பவர்கள் பட்டியலில் சுமார் 828 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 162 பேர் புதிதாக இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்த 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு 828 பில்லியன் டாலர், அதாவது இந்தியாவின் ஜிடிபி-யில் 3ல் ஒரு பங்கு..!
10வது இடம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவரான சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி அவர்களின் சொத்து மதிப்பு 2020ல் 9 சதவீதம் சரிந்து 70,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
சைரஸ் மிஸ்திரியின் குடும்ப நிறுவனமான SP குரூப் நிறுவனத்தின் கடன் சுமைகளை டாடா குழுமத்திடம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
9வது இடம்
இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனமான சன் பார்மா, இந்தக் கொரோனா காலத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதன் வாயிலாகச் சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலிப் சங்வி-யின் சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து 84,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
8வது இடம்
இந்திய தனியார் வங்கி துறையில் மிகவும் சிறப்பாகச் செயல்படும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவரான உதய் கோட்டாக் அவர்களின் சொத்து மதிப்பு 2020ல் 8 சதவீதம் சரிந்து 87,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
7வது இடம்
இந்தியாவின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனமான டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் குழுமத்தின் தலைவர் ராதாகிஷன் தமனி-யின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 56 சதவீதம் வளர்ச்சி அடைந்து 87,2000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
6வது இடம்
இந்தியாவில் கொரோனா மருந்து தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் எஸ் பூன்வாலா அவர்களின் சொத்து மதிப்பு இந்த வருடம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 94,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
5வது இடம்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்கள் மற்றும் வர்த்தகப் பாதிப்பின் எதிரொலியாக இந்நிறுவனத்தின் நிறுவனரான அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 2 சதவீதம் சரிந்து 1,14,400 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
4வது இடம்
அதானி குழுமம் இந்த வருடம் பல்வேறு புதிய முதலீடுகளையும், புதிய வர்த்தகத்திலும் இறங்கிய காரணத்தால் கெளதம் அதானி மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு 48 சதவீதம் வரையில் உயர்ந்து 1,40,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஷிவ் நாடார்
உலகளவில் ஐடி சந்தை மோசமான நிலையில் இருந்த போதும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதாலும், உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற காரணத்தாலும் இந்நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு 34 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,41,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஹிந்துஜா சகோதரர்கள்
ஹிந்துஜா குழுமத்தின் சில முதலீடுகள் சரியான வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் பெற முடியாமல் போன காரணத்தால் ஹிந்துஜா சகோதரர்கள் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த வருடத்தைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டில் 23 சதவீதம் சரிந்துள்ளது.
இதனால் இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 1,43,700 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
முகேஷ் அம்பானி
டாப் 10 பட்டியலில் இருக்கும் சில பணக்காரர்களுக்கு லாக்டவுன் துவங்கிய பின் சொத்து மதிப்பு சரிந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு லாக்டவுன்-க்கு பின்பு தான் ராக்கெட் வேகத்தில் சொத்து மதிப்பு வளர்ச்சி அடைந்தது.
அந்த வகையில் லாக்டவுடன் காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு மணிநேரத்திற்கு 90 கோடி ரூபாய் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2020ல் 73 சதவீதம் வளர்ச்சி அடைந்து மொத்த சொத்து மதிப்பு அளவு 6,58,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.