முன்பெல்லாம் பெரிய பணக்காரர்கள் மட்டுமே விமான பயணம் செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் சர்வசாதாரணமாக விமான பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், விமான நிறுவனங்களும் விமானங்களை அதிகளவில் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகிலேயே அதிக பயணிகள் செல்லும் வழித்தடங்களில் இரண்டு 2 இந்தியாவில் இருந்து கிளம்பும் வழித்தடங்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
10 பிசியான வழித்தடங்கள்
சர்வதேச அளவில் பரபரப்பாக இருக்கும் முதல் 10 வழித்தடங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் மும்பையில் இருந்து துபாய் செல்லும் வழித்தடம் மற்றும் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன.
2 இந்திய விமான வழித்தடங்கள்
சர்வதேச அளவில் பிசியான விமான வழித்தடங்கள் குறித்த பட்டியலில் மும்பை - துபாய் மற்றும் டெல்லி - துபாய் ஆகிய இரண்டு வழித்தடங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய விமான நிறுவனங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மும்பை - துபாய்
கடந்த செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில் மும்பையில் இருந்து துபாய்க்கு 1.97 மில்லியன் பயணிகள் பயணம் செய்ததாகவும் உலகின் எட்டாவது பரபரப்பான விமான வழி பாதையாக இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி - துபாய்
அதேபோல் டெல்லியில் இருந்து துபாய்க்கு கடந்த ஒரு வருடத்தில் 1.90 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளதால் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இந்த வழித்தடம் உள்ளது.
பிசியான துபாய்
மேற்கு ஆசியா விமான நிலையங்களை பொறுத்தவரை முதல் 10 பட்டியலில் துபாய் முன்னணியில் உள்ளது என்பதும் சர்வதேச வழித்தடங்களில் ஐந்தில் துபாய் இடம் பெற்றுள்ளது.
டெல்லி - பாங்காக்
முதல் 10 பரபரப்பான சர்வதேச வழித்தடங்களில் இந்தியாவின் 2 வழித்தடங்கள் இருப்பது இந்தியாவுக்கு பெருமை என்று இந்த பட்டியலை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி - பாங்காக் விமான வழித்தடம் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்தது என்றும் விரைவில் இந்த வழித்தடமும் முதல் 10 பட்டியலில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.