இந்தியாவில் தற்போது கிளீன் எனர்ஜி திட்டங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்று அதற்கான வர்த்தகச் சந்தை உருவாகி வருகிறது. இன்றளவிலும் இத்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே இருந்தாலும் பல நிறுவனங்கள் போதிய வர்த்தகம், லாபம் இல்லாமல் கடனில் முழ்கி இருக்கிறது.
இந்நிலையில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் சோலார் திட்டங்களில் 50 சதவீதத்தைப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்குச் சுமார் 510 மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்துள்ளது.
510 மில்லியன் டாலர் டீல்..!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Total SA என்னும் நிறுவனம், அதானி குழுமத்தின் Adani Green Energy Ltd நிறுவன சோலார் திட்டம் மற்றும் அதனைச் சார்ந்த சொத்துக்களில் 50 சதவீதம் வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மதிப்பு 510 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இந்தியாவின் கிளீன் எனர்ஜி துறையில் நடந்துள்ள மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக உள்ளது.
கூட்டணி நிறுவனம்
அதானி நிறுவனத்தின் சோலார் திட்டங்கள் அனைத்தும் தனி நிறுவனமாக மாற்றப்பட்டு அதில் 50 சதவீத பங்குகளை Total SA நிறுவனமும், மீதமுள்ள 50 சதவீத பங்குகளை Adani Green Energy Ltd நிறுவனமும் வைத்து இக்கூட்டணி நிறுவனத்தை இயக்க உள்ளது.
Adani Green Energy Ltd நிறுவனத்தின் கீழ் சுமார் 2,148 மெகாவாட் சோலார் மின்சாரம் உருவாக்கும் தளத்தை 11 மாநிலங்களில் விரிவாக்கம் செய்து வைத்துள்ளது.
கிளீன் எனர்ஜி துறை
இந்தியாவின் கிளீன் எனர்ஜி துறை மிகப்பெரிய நிதி நெருக்கடியிலும், வர்த்தக முடக்கத்திலும் இருக்கும் போதும் இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் கௌதம் அதானியின் Adani Green Energy Ltd நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை டோட்டல் வாங்க வந்துள்ளது மிகப்பெரிய நம்மதியை இத்துறைக்குக் கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் காற்றாலை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது சோலார் மின்சார உற்பத்தி துறையை மீட்க ஒரு அன்னிய சக்தி வந்துள்ளது.
டோட்டல் நிறுவனம்
கடந்த அக்டோபர் மாதம் டோட்டல் நிறுவனம் கௌதம் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் அதானி கேஸ் திட்டத்தில் சுமார் 37.4 சதவீத பங்குகளைச் சுமார் 5,700 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் பின்பு இதே கூட்டணி சோலார் எனர்ஜி துறையிலும் இணைந்துள்ளது.
இலக்கு
இந்தியா தற்போது 2022ஆம் ஆண்டுக்குள் 175ஜிகாவாட் மின்சாரத்தைக் கிளீன் எனர்ஜி திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நாட்டின் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட போது இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இலக்கை அடைய 2022ஆம் ஆண்டுக்குள் 100ஜிகாவாட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜிகாவாட் திட்டமும், 40 ஜிகாவாட் அளவிலான rooftop சோலார் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.