இந்தியாவின் டெலிகாம் தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்கும் அரசு அமைப்பு தான் ட்ராய்.
சமீபத்தில் ட்ராய் அமைப்பு, இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் & வொடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் சில திட்டங்களை ப்ளாக் செய்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது என்ன புதிய பிரச்சனை? ஏன் ட்ராய் அமைப்பு பார்தி ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியாவின் குறிப்பிட்ட சில திட்டங்களை ப்ளாக் செய்து இருக்கிறார்கள்? வாருங்கள் பார்ப்போம்.
ஏர்டெல் திட்டம்
ஏர்டெல் கம்பெனி, கடந்த திங்கட்கிழமை அன்று, மாதம் 499 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் போஸ்ட் பெய்ட் ப்ளாட்டினம் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு, தங்களின் 4 ஜி நெட்வொர்க்கில் சில தனி முன்னுரிமை வழங்கப்படும் எனச் சொன்னது. சுருக்கமாக, மற்ற ஏர்டெல் வாடிக்கையாளர்களை விட ப்ளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி நெட்வொர்க்கின் வேகம் அதிகமாக இருக்கும்.
வொடாபோன் ஐடியா திட்டம்
ஏர்டெல்லைப் போலவே, வொடாபோன் ஐடியாவும், ரெட் எக்ஸ் (REDX) என்கிற போஸ்ட் பெய்ட் திட்டத்தை கடந்த சில மாதங்களாக நடத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 50 % கூடுதல் வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறது. அது போக சர்வதேச ரோமிங், பிரீமியம் கண்டெண்ட், அளவற்ற டேட்டா போன்ற வசதிகளும் கிடைக்குமாம்.
ட்ராய் கேள்வி
இப்போது இந்த இரண்டு திட்டங்களைப் பற்றித் தான் ட்ராய் அமைப்பு, டெலிகாம் கம்பெனிகளிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவைகளைக் கொடுக்க, மற்ற வாடிக்கையாளர்களுக்கு குறைவான சேவை வழங்கப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறது. அதோடு இந்த இரண்டு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி இருக்கிறதாம்.
ஏர்டெல் தரப்பு
"நாங்கள் தொடர்ந்து எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான நெட்வொர்க்கைக் கொடுக்க விரும்புகிறோம். அதே நேரத்தில் எங்கள் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையையும், சேவையின் தரத்தையும் அதிகரிக்க விரும்புகிறோம்" என விளக்கம் கொடுத்து இருக்கிறது ஏர்டெல்.
வொடாபோன் ஐடியா
வொடாபோன் ஐடியா நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளையும், அதி வேக 4ஜி இணைய சேவையையும் வழங்க ஒப்புக் கொண்டு இருக்கிறது. இந்த ரெட் எக்ஸ் திட்டம், வொடாபோன் ஐடியா சேவையைப் பயன்படுத்தும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களில் யாருக்கு அதிகம் டெலிகாம் சேவைகள் தேவையாக இருக்கிறதோ, அவர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் எனச் சொல்லி இருக்கிறது வொடாபோன் ஐடியா.
என்ன தான் தீர்வு
ஆக ஏர்டெல் தன் விளக்கத்தைச் சொல்லி இருக்கிறது. வொடாபோன் ஐடியா இந்த ரெட் எக்ஸ் திட்டத்தில் எந்த விதமான விதி மீறலும் இல்லை என நினைப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் ட்ராய் அமைப்பு, இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்க இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.