ஐடி துறை என்றால் உயரமான கட்டிடம், ஏசி காத்து, சொகுசான அலுவலகம், கைநிறைய சம்பளம் எனப் பல விஷயங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தாலும் இத்துறையில் பல பிரச்சனைகள் இன்னும் பேசப்படாமல் உள்ளது.
குறிப்பாகப் பிரஷ்ஷர்கள் அதாவது பட்டப்படிப்பை முடித்துப் புதிதாக ஐடி நிறுவனங்களில் சேர்வோர் பல வருடங்களாகப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் இப்பரிவு ஊழியர்களுக்காக குரல் கொடுக்க ஆதிக்கம் நிறைந்த அமைப்புகள் மிகவும் குறைவு.
இப்படியிருக்கையில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கோகன்தாஸ் பாய் அதிரடியாகத் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐடி துறை
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையைச் சேர்ந்த பிரஷ்ஷர்கள் கடந்த 10 ஆண்டுகளாகச் சுரண்டப்படுகின்றனர், இதுதான் தற்போது பல சிக்கல்களுக்கு வழிவகுத்து உள்ளது என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கோகன்தாஸ் பாய் அதிரடியாகத் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
கோகன்தாஸ் பாய்
கோகன்தாஸ் பாய் முக்கியமான அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பு, ஐடி ஊழியர்களுக்கான moonlighting கொள்கை, கொரோனா தொற்று குறைந்தும் அலுவலகத்திற்கு வரத் தயக்கம் ஊழியர்கள் எனப் பல பிரச்சனைக்கு அடிப்படை பிரச்சனையாகப் பிரஷ்ஷர்கள் கடந்த 10 ஆண்டுகளாகச் சுரண்டப்படுவது தான் என ஆரின் கேபிட்டலின் தலைவர் மோகன்தாஸ் பாய் வலியுறுத்தினார்.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் சூழலில் ஐடி துறை நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன. ரூபாய் மதிப்புச் சரிவினால் வருவாய் 13-14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள் மூத்த ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை வாரி வழங்கும் போது ஏன் பிரஷ்ஷர் மற்றும் ஜூனியர் ஊழியர்களுக்குக் கொடுக்கக்கூடாது? என்றும் கோகன்தாஸ் பாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
CXO பிரிவு அதிகாரிகள்
இந்திய ஐடி நிறுவனத்தில் தற்போது CXO பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரஷ்ஷர் மற்றும் ஜூனியர் ஊழியர்களுக்கான சம்பளத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் 15 வருடத்திற்கும் முன்பும் 21,000 முதல் 30,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது, இப்போதும் இதே நிலையில் தான் சராசரியாகச் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.
HCL சிஇஓ சி.விஜய்குமார்
உதாரணமாக, HCL டெக்னாலஜிஸ் சமீபத்தில் தனது ஆண்டறிக்கையில் இந்நிறுவனத்தின் சிஇஓ சி.விஜய்குமார் ஆண்டுக்கு ரூ.123 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார் என அறிவித்தது.
இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்
இதேபோல் இன்போசிஸின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, தலைமை நிர்வாக அதிகாரி சலில் பாரிக்-கின் சம்பளம் 88 சதவீதம் உயர்த்து, அவரது மொத்த சம்பளத்தின் அளவு 42 கோடி ரூபாயில் இருந்து 79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்
மேலும், விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் ஆண்டுக்கு 79.8 கோடி ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார் என்று அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (எஸ்இசி) விப்ரோ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரஷ்ஷர்கள் சம்பளம்
2009-09 முதல் இந்திய டாப் ஐடி நிறுவனங்களின் சராசரி சம்பளம் 3.5 முதல் 3.8 லட்சம் ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் 10 வருடங்களுக்கும் அதிகமாகப் பிரஷ்ஷர்களைச் சுரண்டி வருவதாக மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
மனிதர்களைப் போல நடத்துங்கள்
இதற்கிடையில் இன்போசில்,விப்ரோ போன்றவை வேரியபிள் பே தொகையைக் கட் செய்துள்ளது இதற்கு மோகன்தாஸ் பாய், "ஏதேனும் தியாகம் செய்ய வேண்டும் என்றால், மூத்த அதிகாரிகளுக்கு அதைச் செய்ய வேண்டும்." மேலும், "ஜூனியர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்காத நிலையில் மூத்த அதிகாரிகளுக்கு மட்டும் எப்படிச் சம்பளத்தை உயர்த்த முடியும்? அவர்களை மனிதர்களைப் போல நடத்துங்கள் எனவும் கூறியுள்ளார்.