உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஷாட் வீடியோ வர்த்தகத்தில் இந்தியாவில் சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்ட நாளில் இருந்து பல உள்நாட்டு நிறுவனங்கள் இப்பிரிவில் சூப்பர்ஸ்டார் ஆக மாறியது.
அதில் ஒன்று தான் லைப்ஸ்டைல் மற்றும் சோஷியல் காமர்ஸ் நிறுவனமான ட்ரெல்.
டிக்டாக்
டிக்டாக் வெளியேறிய பின்பு அதன் வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் இந்திய நிறுவனங்கள் அடித்துப் பிரித்துக்கொண்டு வந்த வேளையில் ட்ரெல் நிறுவனமும் வேகமாக வளர்ந்து தனது வர்த்தகத்தைச் சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்திலும் விரிவாக்கம் செய்து அசத்தியது.
ட்ரெல் நிறுவனம்
ஆனால் ட்ரெல் நிறுவன முதலாளிகள் அதாவது நிறுவனர்கள் செய்த நிதி மோசடி ட்ரெல் நிறுவனத்தை மொத்தமாக வீழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனால் சமுக வலைத்தளத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் மக்கள் ட்ரெல் நிறுவனத்தைத் திட்டி பதிவு செய்து வருகின்றனர்.
மோசடி செய்தி
ட்ரெல் நிறுவனர்கள் செய்த மோசடி செய்தி வெளியான பின்பு இந்நிறுவனத்திற்காகக் காத்திருந்த பல மில்லியன் டாலர் முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த ட்ரெல் பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ப்ரீலான்சர்களைப் பணிநீக்கம் செய்தது.
நிதி நெருக்கடி
இதைத் தொடர்ந்தும் நிதி நெருக்கடி சமாளிக்க முடியாத நிலையில் பல ஊழியர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தற்போது ட்ரெல் தளத்தில் இருக்கும் கிரியேட்டர்கள் மற்றும் Influencer-களுக்குப் பணம் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
பணிநீக்கம்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ட்ரெல் நிறுவனம் 1000த்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கி வந்த நிலையில் தற்போது சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே வைத்து இயங்கி வருகிறது. மேலும் ட்ரெல் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரியேட்டர்கள் மற்றும் Influencer-களும் மாறி மாறி பேமெண்ட் பாக்கி குறித்துக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.