தமிழ்நாட்டின் மையத்தில் இருக்கக்கூடிய மாவட்டம் தான் திருச்சி. மாநிலத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு மாவட்டமாகவும் திருச்சி தற்போது இருந்து வருகிறது. திருச்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக ஐடி வேலைகளை உருவாக்கும் டைடல் பூங்கா மற்றும் தொழில் பூங்காக்களை கட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக 5 லட்சம் லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் எல்லாம் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது.

வேலைவாய்ப்பு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் திருச்சி வளர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில் மக்கள் பொழுதுபோக்க ஏதுவாகவும் இடங்களை உருவாக்குவது அவசியம். திருச்சியில் பொழுதுபோக்க இடங்கள் இருக்கின்றன என்றாலும் சென்னை ,கோவை போல ஷாப்பிங் மால்கள் இல்லை. இது திருச்சி நகர மக்களுக்கு பெரிய குறையாகவே இருக்கிறது.
அந்த பிரச்சனையை போக்கும் வகையில் தான் கடந்த ஆண்டு பாரத் குழுமம் திருச்சியில் முதல் ஷாப்பிங் மாலை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டது. திருச்சியில் பாரத் மால் கட்டுமான பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் 3.9 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஷாப்பிங் மால் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன.
இந்த ஷாப்பிங் மால் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் இரண்டாவதாக மிகப்பெரிய ஒரு ஷாப்பிங் மால் அமைய இருக்கிறது. Morais குழுமம் என்ற நிறுவனம் திருச்சியில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்ட இருக்கிறது. இந்த ஷாப்பிங் மாலில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிராண்டுகளின் விற்பனை நிலையங்கள் வர இருக்கின்றன. உணவகங்கள், ஸ்பா ,சினிமா தியேட்டர், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செல்வதற்கும் பொழுது போக்குவதற்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொண்டு தங்களுடைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றுவதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் இந்த மாலில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மால் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலேயே இந்த ஷாப்பிங் மால் கட்டமைக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்ததாக இந்த ஷாப்பிங் மால் இருக்கும் என மொரைஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications