இப்போது தான் மெல்ல, கொரோனா வைரஸ் லாக் டவுனில் இருந்து ஒட்டு மொத்த பொருளாதாரமும் மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்குள், லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் என்று சொல்லப்படும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் ட்ரக்கர்கள், தங்கள் சேவைகளுக்கான விலையை 20 - 25 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஏன் இந்த திடீர் விலை ஏற்றம் என்று கேட்டால், பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை ஏற்றத்தைச் சொல்கிறார்கள். அதோடு லாஜிஸ்டிக்ஸ் தொழிலில், கொரோனா காரணத்தால், வேலைக்கும் ஆள் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறதாம். எனவே ஒட்டு மொத்தமாக லாஜிஸ்டிக்ஸ் வியாபார செயல்பாடுகளுக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறதாம்.
சரக்கு போக்குவரத்து சேவைகளின் விலையை அதிகரித்து இருப்பது, பல வியாபாரங்கள் மற்றும் தொழில் துறையினர்களுக்கு சாதகமாக இல்லை. இந்த விலை ஏற்றம் வேண்டாம் எனவும் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்களாம்.
கொரோனா லாக் டவுன் முடிந்து இப்போது தான் மெல்ல, தொழில் துறையினர்கள், தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் போக்குவரத்து சேவைகளுக்கான தேவையும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் என்கிற போக்குவரத்து சேவை வழங்குபவர், தன் லாஜிஸ்டிக்ஸ் சேவைக்கான விலையை 25 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறாரம். டீசல் விலை ஏற்றத்தின் பிறகும் அதே விலையில் சேவை வழங்கினால் வியாபாரம் நஷ்டத்தில் தான் ஓடும். நாங்கள் நஷ்டத்தில் வியாபாரம் செய்ய முடியாது. ஏற்கனவே கொரோனா லாக் டவுனால் லாஜிஸ்டிக்ஸ் வியாபாரம் சிக்கலில் இருக்கிறது. இதில் வரலாறு காணாத டீசல் விலை ஏற்றம் வேறு எங்கள் வியாபாரத்தை கொன்று கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ராகேஷ்.
மறு பக்கம், உள் நாட்டிலேயெ தேவை பெரிதாக இல்லை. இதில் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிகள் வேறு சரக்கு போக்குவரத்துக்கு விலை ஏற்றினால் எப்படி எனவும் தொழில் துறையினர் கேள்வி எழுப்புகிறார்களாம். டீசல் விலை பிரச்சனையை அரசு கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது.