வளைகுடா நாடுகளில் நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் மோதலுக்கு மத்தியில் புதிய குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள தகவலுக்கும், அதற்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் அளித்த மறுப்புக்கும் இடையே பெரும் முரண்பாடு நிலவி வருகிறது. இந்த நிலைமை, உலக அரசியல் மற்றும் பொருளாதார சந்தைகளில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக "மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியத்தில் நடைபெற்று வரும் தாக்குதல்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை நோக்கி இந்த பேச்சுகள் நடைபெற்று வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் எரிபொருள் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இடைநிறுத்தம், நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்தே அமல்படுத்தப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் மறுப்பு
ஆனால், டிரம்ப் வெளியிட்ட தகவலை Iranian Ministry of Foreign Affairs முற்றிலும் மறுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய போர் சூழ்நிலையில், தங்களது இலக்குகள் நிறைவேறும் வரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும் டிரம்ப் தனது பதிவில் கூறியவற்றை பார்க்கும் போது, ஈரானுக்கு எதிராக அவர் வெளியிட்ட மிரட்டல்களிலிருந்து பின்வாங்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன எனவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
இந்த மோதலில் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படும் Strait of Hormuz குறித்து ஈரான் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு இந்த முக்கிய கடல் வழித்தடம் திறக்கப்படாது என்றும், தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான முக்கிய பாதையாக இருப்பதால், இதை ஈரான் கைப்பற்றி மூடப்பட்ட நிலையில் உலக பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த முரண்பட்ட அறிக்கைகள், உலக சந்தைகளில் நிலவும் அச்சத்தை கூடுதலாக அதிகரித்துள்ளன. பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், அதை ஈரான் மறுத்துள்ளதால், மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனால், எரிபொருள் விலை, கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அடுத்த கட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications