ஈரானில் பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் திடீரென கூட்டு ராணுவ நடவடிக்கையை எடுத்தன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரானில் போர் நீடிக்கிறது. ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டுமில்லாமல் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகள் மற்றும் கச்சா எண்ணெய், எல்பிஜி போன்றவற்றுக்காக வளைகுடா நாடுகளை சார்ந்து இருக்கக்கூடிய ஆசிய நாடுகளையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. பல்வேறு நாடுகளிலும் லாக்டவுன் போன்ற ஒரு சூழலே உண்டாகிவிட்டது.

இந்த சூழலில் எப்போது ஈரான் போர் முடிவுக்கு வரும் என கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போர் முடிவுக்கு வந்தால் தான் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடைந்து எரிபொருள் பிரச்சினை முடிவுக்கு வரும். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் ஈரான் தரப்பு இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் உள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போர் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் இந்த போர் முடிந்து விடும் என கூறியுள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த டிரம்ப் அமெரிக்கா இந்த போரில் இருந்து 2 முதல் 3 வாரங்களுக்குள் வெளியேறிவிடும் எனக் கூறியிருக்கிறார்.

ஈரான் உடனான பேச்சுவார்த்தை நிலைமை என்ன அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றதால் தான் 2 முதல் 3 வாரங்களில் போர் முடியும் என கூறுகிறீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள டிரம்ப், ஈரான் எங்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ள தேவையில்லை என பதிலளித்துள்ளார். அமெரிக்கா போரில் இருந்து வெளியேறுவதற்குள் ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துவிடும் என கூறியுள்ள டிரம்ப், மேற்கொண்டு அங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளார். எனவே ஒப்பந்தம் ஏற்படாமலேயே அமெரிக்கா, ஈரான் போரில் இருந்து வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் யார் அவற்றை பயன்படுத்துகிறார்களோ அவர்களே வந்து பிரச்சினையை தீர்த்து கொள்ளட்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது அடுத்து வரும் சில நாட்கள் முக்கியமானவை என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரான் ராணுவம் அமெரிக்க நிறுவனங்களின் அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட், டெஸ்லா மற்றும் கூகுள், போயிங் போன்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்து இருக்கிறது.
ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக நட்பு நாடுகளே கூட நிற்காத நிலையில் , உள்நாட்டில் ஈரான் போருக்கு எதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என டிரம்புக்கு எதிராக குரல் எழ தொடங்கியுள்ளன. எனவே தான் டிரம்ப் அடுத்த 2 -3 வாரங்களில் போரில் இருந்து வெளியேறுவோம் என கூறுகிறார் என்கின்றனர் நிபுணர்கள்.
Changed the headline based on current analysis about trump's statement on the iran war.


Click it and Unblock the Notifications