அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50% வரி விதிக்கிறது. முதலில் டிரம்ப் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் இறக்குமதி வரி என்பது இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது .
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜவுளி ,நகை, தோல் பொருட்கள், கடல் சார்ந்த உணவுகள் சார்ந்த ஏற்றுமதி துறை சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. டிரம்ப் நிர்வாகம் இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு இறக்குமதி வரியை அதிகரித்திருக்கிறது . இதன் காரணமாக அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

உணவு பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் டிரம்ப் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர் . எனவே இதனை சரி செய்யும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் உணவு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட 200 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பில் இருந்து விலக்கு தந்திருக்கிறது . இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஏற்றுமதியாளர்களும் பயன்பெற முடியும்.
குறிப்பாக காபி மற்றும் டீ ஆகிய இரண்டுக்கும் டிரம்ப் நிர்வாகம் இறக்குமதி வரியிலிருந்து விலக்கு தந்திருக்கிறது . அதேபோல மஞ்சள் ,இஞ்சி , இலவங்கம் , ஏலக்காய் மற்றும் சீரகம் ஆகிய பொருட்களுக்கும் விலக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த துறைகளில் ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு இதன் மூலம் 2.5 பில்லியன் டாலர்கள் வரையிலான ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்திருப்பதாக இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே இந்தியா அமெரிக்கா இடைய வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வரக்கூடிய நிலையில் குறிப்பிட்ட இந்த வேளாண் பொருட்களுக்கு உணவுப்பொருட்களுக்கும் வரி விலக்கு தந்திருப்பது ஒரு பாசிட்டிவான சிக்னல் என இந்த கூட்டமைப்பு தெரிவிக்கிறது . ஏற்கனவே இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இந்த பிரிவுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் போது அது சற்றே சரி செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் இந்தியா அதிக அளவில் அமெரிக்காவிற்கு கடல் சார்ந்த உணவுகள், பாஸ்மதி அரிசி, ஆடைகள் மற்றும் நவரத்தினங்கள் மற்றும் நகைகளை தான் ஏற்றுமதி செய்கிறது என்பதால் இவற்றுக்கு விலக்கு அளிக்கும் போது தான் பெரிய நிவாரணம் என்பது கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications