அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் நாட்டு முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் ஈரான் மிகத் தீவிரமாக பதிலடி தந்தது.
உலகின் முக்கியமான சரக்கு வழி போக்குவரத்து வழித்தடமாக இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் ஏராளமான எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் தேங்கி நிற்கின்றன. பல்வேறு நாடுகளுக்கு எரிபொருட்கள் கிடைக்கவில்லை. உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும் பல மடங்கு உயர்ந்தது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானில் இரண்டு வார காலம் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது முதல் கட்டமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பங்கேற்ற பேச்சு வார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்றப்படவில்லை. இதனை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெறவே இல்லை. அதற்குள் போர் நிறுத்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் தரப்பில் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கும் வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஈரான் தலைமை தற்போது மோசமான பாதிப்பை சந்தித்து இருப்பதாக கூறும் அவர் தற்போதைய சூழலில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து ஒரு உடன்பாட்டுக்கான ஒரு முன்மொழிவை பரிந்துரை செய்வதற்கு கால அவகாசம் தருகிறேன் அதுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என கூறியிருக்கும் அவர் ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதற்கு ஒரு வாய்ப்பு தரும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக கூறியிருக்கிறார்.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செவ்வாயன்று பாகிஸ்தானுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவருடைய பயணமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஈரான் தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்வராக சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா தரப்பு தற்போதைக்கு முழுமையான போரில் ஈடுபடுவதை தள்ளி வைத்திருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் ஈரான் அரசு போர் நிறுத்த அறிவிப்பை ஏற்கவில்லை. ஈரான் நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக் காஃலிபாவின் ஆலோசகர் ஒருவர் அமெரிக்க போர் நிறுத்த நீட்டிப்பு ஒரு திடீர் தாக்குதலுக்காக கால அவகாசம் பெறுவதற்கான ஒரு தந்திரம் என கூறியிருக்கிறார். டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறும் அவர், போரில் தோல்வி அடையும் நிலையில் இருப்பவர்கள் நிபந்தனைகளை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து முற்றுகையிடுவது குண்டு வீச்சில் இருந்து வேறுபட்டது அல்ல என கூறியிருக்கிறார். மேலும் டிரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பு என்பது ஒரு திடீர் தாக்குதலுக்கு தயாராவதற்கான ஒரு தந்திரம் என்பதில் சந்தேகம் இல்லை என கூறியிருக்கிறார். ஈரான் முன் முயற்சி எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இதற்கிடையே ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனியின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விமானப்படை முதல் கடற்படை வரை ஈரான் பாதுகாப்பு படையினர் எதிரிகளை வீழ்த்த தயாராக இருக்கிறோம் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications

