பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி இன்று வரை 20ஆவது நாளாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் போர் தீவிரம் அடைந்த வண்ணமே இருக்கிறதே தவிர ஒரு முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தென்படவில்லை. நாளுக்கு நாள் இருதரப்பும் தாக்குதல்களை அதிகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. இத்தகைய சூழலில் தான் அமெரிக்க அரசாங்கம் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கூடுதல் எண்ணிக்கையிலான அமெரிக்கா ராணுவத்தினரை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறதாம். ஈரான் மீதான operation epic furyஇன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது இருக்கும் என அரசின் மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி குறிப்பிடுகிறது. குறிப்பாக இரண்டு இடங்களை குறிவைத்து அமெரிக்கா தன்னுடைய படைகளை நிலைநிறுத்தும் என்றும் தாக்குதலுக்கும் தயாராகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை சீர்படுத்தக் கூடிய நோக்கத்தில் வான்வழி , தரைவழி மற்றும் கடல்வழி என முப்படை பாதுகாப்பு தர அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் எடுத்து பல்வேறு நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தையும் சீராக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறதாம்.
மேலும் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமாக திகழக்கூடிய கார்க் தீவிற்கும் அமெரிக்கா தன்னுடைய ராணுவத்தை அனுப்ப முடிவு செய்திருக்கிறதாம். முதலில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு படிப்படியாக இந்த பிராந்தியங்களை நோக்கி அவர்களை அனுப்ப ஆலோசனை செய்து வருகிறார்களாம்.

கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி இந்த இரண்டையும் கட்டுக்குள் எடுக்க அமெரிக்கா முயற்சி செய்தால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும். இன்னும் ஆக்கிரோஷமாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தும். எனவே அமெரிக்க அரசாங்கம் அனைத்து சாதக பாதங்களையும் ஆலோசனை செய்து விட்டு தான் இந்த நடவடிக்கையில் இறங்கும்.
இது தவிர ஈரான் வசம் இருக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றவும் அமெரிக்கா ஸ்பெஷல் படைகளை அனுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஈரான் போருக்கு அதிக தொகை செலவிடுவதற்கு அமெரிக்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு நீடிக்கும் நிலையில் எதிர்க்கட்சியினரும் இதனை கடுமையாக எதிர்பார்ப்பார்கள் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ஈரானில் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ராணுவத்தினரை அனுப்பும் முடிவு தற்போது வரை எடுக்கப்படவில்லை என கூறும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிபர் டிரம்ப் அனைத்து வாய்ப்புகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என சூசகமாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அதிபர் டிரம்ப், ஈரானால் உலகிற்கு மீண்டும் ஒரு அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்படாது என்ற உறுதி கிடைக்கும் வரை ஆபரேஷன் எபிக் ஃபியூரி நீடிக்கும் என கூறியுள்ளார். பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி இதுவரை அமெரிக்கா ஈரான் மீது 7,800 முறை வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கிறது. 120 ஈரான் கப்பல்களை வீழ்த்தியதாக தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications