இந்திய ஐடி நிறுவனங்கள் உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யவும், புதிய தொழில்நுட்பத்தில் வர்த்தகம் செய்யத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு இருக்கும் அதே வேளையில் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய நிறுவனங்களுக்குக் கிட்டதட்ட 50 சதவீத வர்த்தகம் மற்றும் வருவாய் கிடைக்கும் அமெரிக்கச் சந்தையில் இருந்து கடந்த 2 வருடங்களாகத் தொடர் நெருக்கடி தான்.
அமெரிக்க அதிபர் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தகம் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது அதிக வரி விதித்தார், அதன் பின்பு அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் அமெரிக்க ஊழியர்களை அதிகம் பணியில் அமர்த்தும் வகையில் சட்டங்களை மாற்றினார்.
இதைத் தொடர்ந்து விசா கட்டணத்தை உயர்த்தினார், விசா பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைத்தார், விசா புதுப்பிப்புகளின் எண்ணிக்கையும் குறைத்தார். கொரோனா பாதிப்புக்குப் பின்பு தற்போது ஹெச்1பி விசா மற்றும் இதர விசா திட்டத்தை 2020ஆம் ஆண்டு இறுதி வரையில் முழுமையாக ரத்துச் செய்துவிட்டார்.
இந்த விசா தடை மூலம் இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விசா தடை
சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவின் படி, அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டினர், அமெரிக்காவில் வந்த பணியாற்றக் கொடுக்கப்படும் ஹெச்1பி, ஹெச் 4, ஹெச் 2பி, ஜே, எல் விசா வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரையில் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இது உத்தரவின் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை மட்டும் அல்லாமல் 0.25 முதல் 0.30 சதவீத லாபமும் குறைய வாய்ப்புள்ளதாகக் கிரிசில் ரேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
விசா தடையைச் சமாளிக்கவும், புதிய வர்த்தகத்தையும் பெறுவதற்காகத் தற்போது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இருக்கும் ஓரே வழி அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்துவது தான். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகப் பாதிப்புக் குறைந்தாலும் செலவுகள் அளவு அதிகரிக்கும்.
2021ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் லாபத்தில் அதிகப்படியாக 2.50 சதவீதம் பாதிப்படையும், அதேபோல் செயலாக்க லாப அளவீடுகளும் 23 சதவீதமாகக் குறையும் என டாப் 15 நிறுவனங்களின் ஆய்வுகள் மூலம் கிரிசில் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிராகரிப்பு
அமெரிக்காவில் தற்போது விசா விண்ணப்பம் நிராகரிப்பின் அளவு 6 சதவீதத்தில் (2016) இருந்து 39 சதவீதமாக (2020) உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்கள் தற்போது அமெரிக்க ஊழியர்களை அதிகம் நம்ப வேண்டியிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதிய ஊழியர்கள்
இதேபோல் அமெரிக்காவில் வெறும் 30-35 சதவீத அமெரிக்க ஊழியர்களை வைத்து வர்த்தகம் செய்து வந்த இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்க ஊழியர்களின் எண்ணிக்கையை 55- 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
ஐடி கன்சல்டன்சி சேவை துறையில் 60 சதவீதம் வர்த்தகம் மற்றும் வருமானத்தை ஈட்டி தரும் டாப் 5 ஐடி நிறுவனங்கள் தற்போது வெறும் 5 சதவீத ஹெச்1பி விசாவை வைத்து வர்த்தகம் செய்கிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் தரும் டிஜிட்டல் வர்த்தகத்தைப் பெறுவதற்காக அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் புதிய ஊழியர்களை (அமெரிக்க ஊழியர்கள் மற்றும் ஹெச்1பி விசா வாயிலாக 25% ப்ரீமியம் வெளிநாட்டு ஊழியர்கள்) பணியில் அமர்த்தினால் இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் கூடுதலாக 1,200 கோடி ரூபாய் செலவுகள் அதிகரிக்கும் இது லாபத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.