கொரோனா-க்கு முன்பு அமெரிக்கா - சீனா இடையே இருந்த வர்த்தகப் போர் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா பாதிப்பிற்குப் பின் அமெரிக்காவில் இருக்கும் சீன நிறுவனங்களுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அதிகளவில் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருக்கும் சில முக்கியமான நிறுவனங்கள் சீன அரசு அல்லது சீன ராணுவத்துடன் பயனியாற்றுகிறது அறிவித்து அந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் யாரும் வர்த்தகம் செய்யக் கூடாது என அறிவித்தது முதல் இன்று வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சீன நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது டிக்டாக் மீது விதிக்கப்பட்ட தடையைப் போலவே சீனா முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா மீது விதிக்கப்படலாம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பங்குச்சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் சீன நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் எனப் பல வாரங்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில் அமெரிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை முற்றிலுமாகத் தடை செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்க அரசு.
90 நாட்கள் கெடு
பைட்டான்ஸ் 2017ல் Musical.ly செயலியை கைபற்றி டிக்டாக் உடன் இணைத்த பின்பு தான் டிக்டாக் சேவை மிகப்பெரிய அளவிலான வர்த்தக உயர்வை அடைந்தது. இந்த இணைப்பில் பல்வேறு தேசியப் பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாக அமெரிக்கா தற்போது குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வர்த்தகச் சேவையில் Musical.ly தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இந்த இணைப்பு சார்ந்துள்ள வர்த்தகம் அனைத்தும் 90 நாட்களுக்குள் முழுமையாக விற்பனை செய்துவிட்ட வெளியேற வேண்டும் என்றும் அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிற்குள்ளேயே விற்பனை செய்து விட்டு மொத்தமாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு.
அலிபாபா
பைட்டான்ஸ், டிக்டாக் போல அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பிற சீன நிறுவனங்களான அலிபாபா போன்ற முன்னணி நிறுவனங்களுக்குத் தடைவிதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் எழுந்த கேள்விக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆம், அதைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார் அலிபாபா.
அமெரிக்கா - சீனா
பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் வேகமான வளர்ச்சி அடைந்து வரும் அமெரிக்கா - சீனா நாடுகள் இடையேயான போட்டி மிகப்பெரிய உச்சத்தை அடைந்த நிலையில் தான் அமெரிக்கா சீன இறக்குமதி பொருட்களுக்கு அதிகளவிலான வரியை விதித்து வர்த்தகப் போர் துவக்கியது. இதற்கு ஏற்றார் போல் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு அதிகளவிலான வரியை விதித்தது.
ஆனால் ஜனவரி இறுதியில் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போரின் தாக்கம் தணிந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுத் தற்போது அமெரிக்கா சீனாவின் டிஜிட்டல் சேவையில் பாதுகாப்புப் பிரச்சனை இருப்பதாகக் கூறி சீன நிறுவனங்களின் வர்த்தகத்திற்குத் தடை விதித்து வருகிறது அமெரிக்க அரசு.