ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த ஈரான் அமெரிக்கா போர் ஒரு வழியாக நிறுத்தப்பட்டுள்ளது என சந்தோஷப்படுவதற்குள் அடுத்த பிரச்சினை எழுந்துவிட்டது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இது ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து ஆயிரக்கணக்காவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் இரண்டு வார காலத்திற்கு இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு தங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் பட்சத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம் , பேச்சு வார்த்தையில் பங்கேற்போம் என ஈரான் அறிவித்தது. ஆனால் தற்போது இதில் பெரிய குழப்பமே ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருக்கிறது.ஆனால் லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏனெனில் லெபனானில் உள்ள இஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தன. இதன் காரணமாக அந்த அமைப்பின் மீது இஸ்ரேல் தற்போது கடும் தாக்குதலை தொடுத்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானில் உள்ள இஸ்புல்லா அமைப்பு மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற அம்சம் இல்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து லெபனானை தாக்குவோம் என அறிவித்திருக்கிறது இஸ்ரேல். இதனை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. தங்களுக்காக ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்புல்லா அமைப்பு குறித்த எந்த அம்சமும் இல்லை என அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன. எனவே மீண்டும் ஈரான் போர் பழைய நிலைக்கே திரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு இடையே அமெரிக்கா துணை அதிபர் ஜே டி வான்ஸ் தலைமையிலான குழுவினர் ஈரானுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் மற்றொரு குழப்பமும் உண்டாகி இருக்கிறது அதாவது ஈரான் வெளியிட்ட 10 அம்ச போர் நிபந்தனைகள் என ஊடகங்களில் வெளியாக கூடிய ஆவணமும் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து ஏற்றுக்கொண்ட ஆவணமும் ஒரே மாதிரி இல்லை என அமெரிக்கா திடீரென தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீட் ஈரான் வெளியிட்டதாக பரவி வரும் 10 அம்சத் திட்டமும் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதற்காக ஏற்பட்ட நிபந்தனைகளும் ஒன்று அல்ல என தெரிவித்திருக்கிறார்.
ஈரான் மீதான தாக்குதலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் , தங்கள் மீதான அனைத்து விதமான பொருளாதார தடைகளையும் நீக்க வேண்டும், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் ஈரான் தரப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆவணம் பரவுகிறது. ஆனால் அமெரிக்கா தரப்போ இப்படிப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய எந்த ஒரு ஆவணமும் எங்களுக்கு வரவில்லை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய நிபந்தனைகள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன என்றார்.
மேலும் முதலில் ஈரான் அனுப்பிய பரிந்துரை முற்றிலும் ஏற்று கொள்ளாத வகையில் இருந்ததால் டிரம்ப் அதனை உடனே குப்பை தொட்டியில் வீசிவிட்டார் என கூறியுள்ளார். இப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அமெரிக்க அரசு ஏற்று கொண்ட அம்சங்கள் என்னென்ன, எதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை கட்டமைக்கப்படுகிறது என்பதௌ வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார்.
ஈரான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு நாள் தான் ஆகிறது, ஆனால் அதற்குள் அதில் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு கருத்தை கூறுவது போர் நிறுத்த முடிவை திரும்ப பெற செய்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications