அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன்பாகக் கொரோனா எதிரொலியால் தன் நாட்டு மக்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாகவும், அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை பெற்றத்தர வேண்டும் என்றும் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து பணியாற்ற அனுமதி கொடுக்கப்படும் விசாவை தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு அமெரிக்காவின் டெக் மற்றும் சாப்ட்வேர் சந்தையில் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாகக் கூகிள், அமேசான், டெஸ்லா போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் நேரடியாக அமெரிக்க அரசின் இந்த முடிவிற்கு வருந்தினர்.
டிரம்ப்பின் இந்த உத்தரவால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்..? 4.5 கோடி மக்களுக்குக்கான வேலையை இந்த விசா தடை தீர்த்துவிடுமா..?
விசாவுக்கு தடை
திங்கட்கிழமை டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவின் படி, அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டினர், அமெரிக்காவில் வந்த பணியாற்றக் கொடுக்கப்படும் ஹெச்1பி, ஹெச் 4, ஹெச் 2பி, ஜே, எல் விசா வழங்குவதை இந்த ஆண்டின் இறுதி வரையில் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
அமெரிக்கக் கனவு
இந்த உத்தரவு பல லட்ச இந்தியர்களின் அமெரிக்கக் கனவைக் கொன்றுவிட்டது என்றே சொல்லலாம். ஏற்கனவே வெளிநாட்டினருக்குக் கொடுக்கப்படும் வேலைவாய்ப்பை பிடுங்க வேண்டும் என டிரம்ப் கூறியதை கொரோனா-வை காரணம் காட்டி தேர்தல் எதிர்வரும் நேரத்தில் சாதித்து விட்டார்.
அமெரிக்காவிற்கு லாபம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் இந்தத் தற்காலிக விசா தடை அறிவிப்பால் சுமார் 5.25 லட்சம் வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்குக் கிடைக்கும் என அமெரிக்க வேலைவாய்ப்பு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
இந்த 5.25 லட்சம் வேலைவாய்ப்பு என்பது நேரடி எண்ணிக்கை, இதன் மூலம் உருவாகும் மறைமுக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இதை அளவிற்கு இருக்கும் என்பது அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையின் கணிப்பு.
4.5 கோடி மக்கள்
அமெரிக்காவின் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, அந்நாட்டில் வேலை இழந்துள்ளதாகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 4.5 கோடி பேர்.
ஆனால் ஒரு வருடத்திற்கு அமெரிக்க அரசு கொடுக்கப்படும் விசா எண்ணிக்கை எப்படிப் பார்த்தாலும் 3 லட்சத்தைத் தாண்டாது. ஹெச்1பி விசா (65000), மாஸ்டர் டிகிரி கொண்டவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் 20000 விசா, ஹெச்2பி விசா (66,000), ஹெச்4 விசா அதிகப்படியாக 1.5 லட்சம்.
இப்படி வெறும் 3 லட்ச வேலைவாய்ப்பு பெறும் வெளிநாட்டினருக்குத் தடை விதித்துவிட்டு ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதுபோல் காட்டப்படுகிறது.
சவால்
ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் திடீர் திறன் தட்டுப்பாட்டை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது தான் தற்போதைய சவால். இந்த விசா தடையின் காரணமாகப் பல முக்கியத் திட்டங்கள் இயங்குவது தாமதமாகும், இல்லையெனில் பல திட்டங்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாக்கு இது இரண்டுமே அமெரிக்க நிறுவனங்களுக்குப் பிரச்சனை தான்.
இந்திய நிறுவனங்கள்
ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் டிரம்ப் அரசின் உத்தரவுகளுக்குப் பயந்து அதிகளவிலான அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தியும், அதிகளவிலான முதலீட்டை அமெரிக்காவில் செய்து வரும் நிலையில் தற்போதைய பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிமாண்ட்
மேலும் புதிதாக யாருக்கும் விசா கொடுக்கப்படாதது மூலம் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக மாறும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அதேவேளைவில் அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைக் குறிவைத்துப் பணிநீக்கம் செய்து வருவதையும் கேள்விப்பட்டு வருகிறோம்.