அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் தனது முடிவை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியாவின் முன்னணி பணக்கார வணிகக் குடும்பங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ், அதானி, லட்சுமி மிட்டல் போன்ற பெரும் தொழிலதிபர்களின் வர்த்தக நிறுவனங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இப்போது நாம் கட்டணங்களால் ஒரு நெருக்கடியில் இருக்கிறோம் என்று இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் குடும்ப அலுவலகமான கேட்டமரன் வென்ச்சர்ஸின் தலைவர் தீபக் படாகி ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார். நீண்ட காலத்திற்கு, இத்தகைய நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க சிறந்த வழி, வாடிக்கையாளர்களுக்குத் தவிர்க்க முடியாத அளவுக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதுதான்.

டிரம்ப்பின் வாதம் என்ன?: அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமாக இருப்பதாக டிரம்ப் நீண்ட காலமாக கூறி வருகிறார். இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு மிகப்பெரிய வரிகளை விதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த 50% வரி விதிப்பானது, அந்த ஒருதலைபட்சமான வர்த்தக உறவை சமநிலைப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் பாதிப்பு?: முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் எண்ணெய் வருவாயில் 45%-க்கும் மேல் ஏற்றுமதி மூலம் பெறுகிறது. டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு, ரிலையன்ஸின் அமெரிக்க ஏற்றுமதியை கடுமையாகப் பாதிக்கும்.
மேலும், தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ரிலையன்ஸ் லாபம் ஈட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கௌதம் அதானி - அதானி குழுமம்: அதானி போர்ட்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக ஆபரேட்டர். ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டால், அதன் துறைமுக வர்த்தகமும் குறையக்கூடும். அதானியின் சூரிய மின்கல உற்பத்தி வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட 1.7 ஜிகாவாட் சூரிய மின்கலங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்குச் சென்றவை. 50% வரி விதிப்பு, இந்த ஏற்றுமதியை முழுமையாக முடக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
லட்சுமி மிட்டல் - ஆர்சலர் மிட்டல்: ஆர்சலர் மிட்டல் நிறுவனம் 2024-இல் $6.7 பில்லியன் மதிப்புள்ள எஃகை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இந்த வரிகள் காரணமாக, நடப்பு ஆண்டில் அதன் லாபம் $150 மில்லியன் குறையும் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
விக்ரம் லால் - ஐஷர் மோட்டார்ஸ்: ராயல் என்ஃபீல்ட் பைக்குகளைத் தயாரிக்கும் ஐஷர் மோட்டார்ஸ், அமெரிக்க மோட்டார் சைக்கிள் சந்தையில் 8% பங்கைக் கொண்டுள்ளது. டிரம்ப்பின் வரி விதிப்பு, அதன் அமெரிக்க ஏற்றுமதியைப் பாதிக்கும் என்பதால், நிறுவனம் மாற்று வழிகளைத் தேடி வருகிறது.
பாபா கல்யாணி - பாரத் ஃபோர்ஜ்: பாரத் ஃபோர்ஜ் தனது வருவாயில் சுமார் 10% அமெரிக்க ஏற்றுமதி மூலம் பெறுகிறது. வரி மற்றும் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் அமெரிக்க ஏற்றுமதிகள் கடினமான சூழலை எதிர்கொள்ளும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பால்கிரிஷன் கோயங்கா - வெல்ஸ்பன் லிவிங்: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு ஜவுளி ஏற்றுமதியாளர்களில் ஒன்றான வெல்ஸ்பன் லிவிங், அதன் வருவாயில் 61% அமெரிக்காவிலிருந்து பெறுகிறது. 50% வரி விதிப்பானது, அதன் வர்த்தகத்தைப் கடுமையாக பாதிக்கும்.
ஒட்டுமொத்தமாக, டிரம்ப்பின் இந்த வரி அறிவிப்பு, இந்திய பில்லியனர் குடும்பங்களின் வர்த்தக சாம்ராஜ்யங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்கள் வணிக உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications