அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வாரம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தது , ஆனால் அதற்கு ஈரான் முன்வரவில்லை. இந்த வாரம் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டாம் என உத்தரவிட்டதால் அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது ராணுவ தாக்குதலை தொடங்கின. இதனை அடுத்து இரு தரப்புக்கும் இடையே போர் முண்டது. இந்த போர் உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கச் செய்தது. பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் , டீசல் விலை மற்றும் சிலிண்டர் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தார்.

இந்த தற்காலிக போர் நிறுத்தம் இருதரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமலில் இருக்கும் எனக் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் முதல் கட்டமாக பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தை நடந்தது அது தோல்வியில் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கான கூட்டத்தை பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது. ஆனால் இரு தரப்புமே மாறி மாறி இதில் பங்கேற்காமல் தவித்து வருகின்றன.
இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததால் பேச்சு வார்த்தை நடக்காமலேயே இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படாமல் கப்பல் போக்குவரத்தும் தொடர்ந்து தடைப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு மூன்று நாட்கள் மட்டுமே கெடு விதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஈரான் இந்த மூன்று நாட்களுக்குள் இறங்கி வரவில்லை என்றால் அவர்கள் தீவிரமான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் எண்ணெய் கட்டமைப்புகளே அழிந்து போகும் என்றும் எச்சரித்து இருக்கிறார். ஈரானில் இருந்து கப்பல்களுக்கு கச்சா எண்ணெய் ஏற்றக்கூடிய குழாய்களில் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கிறது. அவை வெளியே எடுக்கப்படாமல் கடுமையான அழுத்தத்தில் இருக்கின்றன, இன்னும் மூன்று நாட்களில் அவை தானாகவே வெடித்து சிதறும் என டிரம்ப் கூறியிருக்கிறார். அவ்வாறு நடந்தால் ஈரானுக்கு தான் பெரிய நஷ்டம் என்றும் மீண்டும் இது போன்ற குழாய்களை பதிப்பதற்கு அவர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த போரில் அமைதி பேச்சு வார்த்தைக்கு முன் வராமல் இருப்பதால் பெரிய அளவிலான நஷ்டம் ஈரானுக்கு தான் ஏற்பட போகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே இந்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து பழையபடி என்னை சப்ளையை தொடங்கவில்லை என்றால் மிக மோசமான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க போகிறது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும் ஈரான் நேரடியாகவே எங்களிடம் பேசலாம், எங்களை தொடர்பு கொள்ளலாம் மொபைல் வாயிலாக பேசலாம் அல்லது பாதுகாப்பான பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன அவற்றின் வாயிலாக தொடர்பு கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அவர்களாகவே முன் வரலாம் என கூறியிருக்கிறார். அணு சக்தி திட்டங்களை முழுமையாக கைவிடுகிறோம் என்ற உறுதியை அவர்கள் தந்தால் மட்டுமே இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெறும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

