நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் குவிவது வழக்கம். இதனால் திருப்பதியில் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு நேரங்களில் பக்தர்கள் 3 நாட்கள் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலையிருந்தது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாளும் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்களை வழங்கி வருகிறது.
இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து நீண்ட நேரம் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் ஒரு சில மாற்றங்களை அறிவித்திருக்கிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்குபவர்கள் எளிதாக தரிசனம் செய்யவும், தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் 1500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்களை வழங்கி வருகிறது. இப்படி வழங்கப்படும் டிக்கெட்களில் 3 மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் செய்வதற்கு 500 டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 200 டிக்கெட் திருப்பதி விமான நிலையத்தில் ஸ்பாட் புக்கிங் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 800 டிக்கெட் தினசரி புக்கிங் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஆனால் இனி தினசரி அடிப்படையில் புக்கிங் செய்யப்படும் 800 டிக்கெட்களிலிருந்து 300 டிக்கெட்களை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு ஒதுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. நன்கொடை வழங்குபவர்கள் வேகமாக சுவாமி தரிசனம் செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு தகுதி பெற பக்தர்கள் 2025-ஆம் ஆண்டின் மே 1-ஆம் தேதிக்குப் பிறகு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவராக இருக்க வேண்டும். இந்த சிறப்பு டிக்கெட் தினமும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். நன்கொடை வழங்கியவர்கள் மதியம் 1 மணிக்குள் முன்பதிவு செய்துவிட்டால் அதே நாள் 4 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நன்கொடை வழங்கிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இந்தப் புதிய நடைமுறை ஜூன் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
நன்கொடை வழங்கியவர்களுக்காக ஒதுக்கப்படும் 300 டிக்கெட்டுகள் முழுமையாக புக்கிங் செய்யப்படாமல் மீதமிருந்தால்.. அவை மீண்டும் தினசரி புக்கிங் செய்வதற்காக ஒதுக்கப்படும். இதனால் தரிசன டிக்கெட் எதுவும் வீணாகாமல் மற்ற பக்தர்களுக்கும் பயன்படும் என TTD தெரிவித்திருக்கிறது.
திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அமைதியான முறையில் தரிசனம் செய்வதற்காக TTD இதுபோன்ற மாற்றங்களை அவ்வப்போது செய்யும். அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காக எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய நடவடிக்கை இந்த டிக்கெட் மாற்றம்!


Click it and Unblock the Notifications