கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றை இழந்து நிதி நிலை அளவில் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல் கொரோனா அலையில் மக்களுக்கு உதவும் வரையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து வங்கிக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் 6 மாத காலம் சலுகை அளித்தது.
இந்த 6 மாத சலுகை என்பது பல கோடி மக்களையும், குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றியது என்றால் மிகையில்லை.
இதேபோன்ற சலுகையை மீண்டும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடனுக்கான தவணை விதிவிலக்கு
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது.
பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர்
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாகத் தலையிட வேண்டும்.
முதல்வர் முக.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத்தவணைகளிலிருந்து விலக்குப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எனத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
ஆனால் ரிசர்வ் வங்கி தற்போது 6 மாத கடன் சலுகையைப் போலவே கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைத் தனிநபர்களுக்கும் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அனைவருக்கும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் விருப்பப்படுவோர் சலுகையைப் பெறும் வகையில் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் கோரிக்கை - வரி விலக்கு
இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வரும் வேளையில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை விலக்க கோரி தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநிலங்களும் கோரிக்கை முன்வைத்து வருகிறது.
இதற்கான பதில் ஜூன் 8ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் முன் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.