இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வீட்டிலேயே தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக உட்கொண்டனர்.
இதன் எதிரொலியாக இந்தியாவில் எல்லா நோய்களையும் சரிப்படுத்தும் திறன் கொண்டது என நம்பப்படும் மஞ்சள் கொரோனா காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக 2019-20ஆம் ஆண்டை விடவும், 2020-21ஆம் நிதியாண்டில் மஞ்சள் விற்பனை சுமார் 300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மஞ்சள் தேவை
இந்திய மக்கள் மத்தியில் மஞ்சள்-க்கான தேவை திடீரென அதிகரித்த காரணத்தாலும், சந்தையில் போதுமான இருப்பு இல்லாத காரணத்தால் மஞ்சள் அதிகம் உற்பத்தி செய்யும் இரு மாநிலங்களிலும் மஞ்சள் விலை அதிகரித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த விலை உயர்வும், சந்தையில் ஏற்பட்டு உள்ள டிமாண்ட்-ம் 2021ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று
இந்தியாவில் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மஞ்சள்-க்கான டிமாண்ட் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்பை, தானே, கேரளா ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மஞ்சள் விலை உயர்வு
இதன் வாயிலாக மஞ்சள் பவுடரின் விலை கடந்த மாதம் கிலோ 200 முதல் 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் இதன் விலை 270 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதேவேளையில் முழு மஞ்சள் விலை கிலோ 40-60 ரூபாயில் இருந்து 85 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கிட்டதட்ட 2 மடங்கு அதிகமாகும்.
மகாராஷ்டிரா மாநிலம்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாய மார்க்கெட்டிங் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த வருடம் மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ மஞ்சள் 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மார்ச் 8ஆம் தேதி 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கிட்டதட்ட 70 சதவீதம் அதிகமாகும்.
முக்கிய மாநிலங்களில் விலை உயர்வு
மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற அனைத்து மாநிலங்களிலும் மஞ்சள் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்குக் கொரோனா தொற்று மூலம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி முக்கியக் காரணமாகவும் விளங்குகிறது.
ஆயுர்வேத முறைகள்
இதேவேளையில் மத்திய அரசு கொரோனா தொற்றுக் காலத்தில் ஆயுர்வேத முறையில் மஞ்சள் கலந்த பால், யோகா, பல்வேறு கசாயம் ஆகியவை கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக சாப்பிடலாம் என அறிவுரை கூறியது, இதன் வாயிலாக இந்தியாவில் கிராமங்கள் முதல் பெரும் நகரங்கள் வரையில் மஞ்சள் பயன்பாடு அதிகரிக்கப்பட்டது.