டெல்லி: இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் அமைப்பான இந்திய ஒளிப்பரப்பு அறக்கட்டளை, கடந்த திங்கட்கிழமையன்று மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு காரணம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சமீபத்திய கட்டண சீர்திருத்தம் தான் என்றும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 2019ல் டிராய் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதன் மூலம் கட்டணங்கள் குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு பயன் அளித்ததாக கூறப்படும் நிலையில் ஒளிப்பரப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இலவச சேனல்கள்
முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் வழங்கப்பட்டு வந்தன. ஜிஎஸ்டியுடன் சேர்த்து சுமார் 153 என்ற விலையில் தற்போது கிடைத்து வருகிறது. இந்த தொகையானது NCFக்கு மட்டுமானது. இலவச சேனல்களுக்கு எதுவும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டது. ஆக மொத்தம் இந்த 100 சேனல்களில் 25 சேனல்கள் தூர்தர்ஷன் சேனல்களும், மீதமுள்ள 75 சேனல்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் சேனல்கள்
டிராயின் திட்டத்தின் படி, 100 சேனல்களுக்கு மேலாக உங்களுக்கு கூடுதல் சேனல்கள் வேண்டுமென்றால், கூடுதல் கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதிலும் வாடிக்கையாளர்கள் எச் டி தர சேனல்களை தேர்வு செய்தால் இரு சேனல்களுக்கான இடத்தை பிடித்துக் கொள்ளும் என்றும் டிராய் அந்த சமயத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோசமாக பாதிக்கும்
இந்த நிலையில் டிராய் உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், டிராய் கட்டணங்களை எதிர்த்து தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இத்துறையின் வளர்ச்சியை மிக மோசமாக பாதிக்கும் என்றும் ஒளிப்பரப்பாளர்கள் வாதிடுகின்றனர், மேலும் இந்த மனுவானது இன்று விசாரனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கட்டண குறைப்பு
இப்படி ஒரு நிலையில், டிராய் கடந்த திங்கட்கிழமையன்று கட்டண சேனல்களின் அதிகபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட 19 ரூபாயை 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது பிரசார் பாரதி சேனல்களைத் தவிர 130 ரூபாய் கட்டணத்தில் இனி 200 சேனல்கள் ஒளிபரப்பாக வேண்டும் என்றும் டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்.