இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிக்கவும், அதை மக்கள் மத்தியில் பரவுவதைத் தடுக்கவும் பல அமைப்புகள், நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. அதில் குறிப்பாக BSF பிரிவு போலீஸ் அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளம், தோனி, தெலுங்கு நடிகர்கள் உட்படப் பல அமைப்புகளும், தனிநபர்களும் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் நன்கொடை கொடுக்கத் துவங்கியுள்ளது.
டிவிஎஸ்
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் சுந்தரம்-கிலேடன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும், நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை எடுக்கச் சுமார் 30 கோடி ரூபாய் தொகை நன்கொடையாகக் கொடுத்துள்ளது.
வேணு ஸ்ரீநிவாசன்
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் கூறுகையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நாட்டை ஒன்று சேர்ந்து காக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
இதில் எங்களின் பங்காக 30 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
100 வருட வரலாறு
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அதற்காக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உதவுவதே எங்களின் முதல் குறிக்கோள். கடந்த 100 வருடமாக மக்களுக்கும், சமுகத்திற்கும் டிவிஎஸ் குழுமம் எப்படி உதவி செய்ததோ, அதைத் தொடர்ந்து செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவில் 3 பேர்
தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் கொரோனாவால் இறந்ததை அடுத்துத் தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவரின் எண்ணிக்கை 1 ஆக உள்ளது.
மதுரை, ஈரோடு, சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் தாய்லாந்திலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்குக் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த 54 வயது நபரின் குடும்பத்தினர் இருவருக்கும் சென்னையில் கொரோனா வந்தவருடன் பழகிய இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதல்நிலையிலிருந்து இரண்டாவது நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது, தமிழகடத்த்தில் மூன்றாம் நிலை ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.