கொரோனா பாதிப்பின் காரணமாக உற்பத்தியிலும், விற்பனையிலும் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், நிதி நிலையைச் சற்று மேம்படுத்தவும் தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்துள்ளது. அதுவும் அடுத்த 6 மாதத்திற்கு இது நடைமுறையில் இருக்கும் என டிவிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா-க்கு முன்பும் சரி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்பும் சரி இந்தியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட துறை என்றால் அது ஆட்டோமொபைல் துறை தான். ஏற்கனவே பல்வேறு வர்த்தகப் பாதிப்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் அறிமுகம், குறைந்த லாபம், BS6 தரம் குறித்த பிரச்சனை எனத் தொடர்ந்து மோசமான நிலையிலிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறை, கொரோனா பாதிப்பிற்குப் பின் முழுமையாக முடங்கியுள்ளது.
இந்தியாவில் லாக்டவுன் 4.0 நடைமுறையில் இருக்கும் நிலையில், பல்வேறு தளர்வுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஆட்டோமொபைல் துறை தனது உற்பத்தியைத் துவங்கியது.
டிவிஎஸ்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் தற்போது அறிவித்துள்ள சம்பள குறைப்பு அனைத்தும் நிர்வாகப் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால், மற்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
Executives பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு 5 முதல் 20 சதவீதம் வரையிலான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
6 மாதம்
இந்தச் சம்பள குறைப்பு குறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " டிவிஎஸ் நிர்வாகம் அறிவித்துள்ள சம்பள குறைப்பு அனைத்தும் நிர்வாகப் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால், மற்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
ஜூனியர் நிர்வாக அதிகாரிகளுக்கு அடுத்த 6 மாதத்திற்கு 5 சதவீத சம்பள குறைப்பும், உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு அடுத்த 6 மாதத்திற்கு 15 முதல் 20 சதவீத சம்பள குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் தானாக முன்வந்து சம்பள குறைப்பை ஏற்றுக்கொண்டது நிர்வாகத்திற்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
லாக்டவுன்
இந்தியாவில் அதிக இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கும் டிவிஎஸ், மார்ச் மாத கடைசியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போதே தனது மொத்த உற்பத்தியையும் நிறுத்திவிட்டது.
ஏப்ரல் மாதத்தில் ஜீரோ
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் டிவிஎஸ் இந்தியாவில் வெறும் 94,103 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து சுமார் 62 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்தது.
ஏப்ரல் மாதம் முழுவதும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை 100% முடங்கியது. இதனால் ஏப்ரல் மாதம் ஒரு வாகனத்தைக் கூட டிவிஎஸ் விற்பனை செய்யவில்லை.