இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், காக்னிசென்ட், டிசிஎஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஊழியர்களும் அவர்களது குடும்பத்திற்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பு மருந்து அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35,000 நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக அளிக்கப்படும், இதற்கான செலவுகளை டிவிஸ் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்.
இந்நிலையில் முதற்கட்டமாக 60 வயது மற்றும் 45 வயதுக்கும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட உள்ளது.
மேலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஊழியர்களின் நலனில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. கொரோனா தொற்று நிலவிய காலகட்டத்தில் ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துக்கொடுத்த நிலையில் தற்போது தடுப்பு மருந்து அளிப்பதற்கான பணிகளையும் செய்ய உள்ளோம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் HR பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மட்டும் அல்லாமல் சுந்தரம் க்ளேடன், டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ், சுந்தரம் ஆட்டோ, எமரால்டு ஹேவென் ரியலிட்டி ஆகிய நிறுவன ஊழியர்களும் கொரோனா தடுப்பு மருந்து பெற உள்ளனர்.