இந்தியாவின் முன்னணி மற்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் தமிழ்நாட்டில் சுமார் 1200 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்குவது மட்டும் அல்லாமல் உலகத் தரத்திற்கான ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தையும் உருவாக்க டிவிஎஸ் முடிவு செய்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இன்று தமிழ்நாட்டு அரசுடன் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது, இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 4 வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பியூச்சர் டெக்னாலஜிஸ் மற்றும் எலக்ட்பிக் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன பிரிவு
இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் புதிய வாகனங்களுக்கான டிசைன், டெவலப்மென்ட் மற்றும் உற்பத்தி ஆகியவற்றைச் செய்ய உள்ளது. இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ள நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த முடிவு, இந்நிறுவன வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும்.
1 டிரில்லியன் டாலர்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு இருக்கும் பொறுப்பை இந்த முதலீடு காட்டுகிறது. மேலும் கோவையில் நடக்கும் பொருளாதார மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலரை விரைவில் தொடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேணு ஸ்ரீனிவாசன்
மேலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் தமிழ்நாட்டு அரசு மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கோவையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2021ல் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழ்நாட்டு முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் டிவிஎஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் உடன் இருந்தனர்.
டிவிஎஸ்
டிவிஎஸ் நீண்ட காலமாக இயங்கி வரும் நிலையில் தன்னைத் தொடர்ந்து டிஜிட்டல் காலகட்டத்திற்கு ஏற்றவாறு பரிமாண வளர்ச்சி அடைந்து வருகிறது. டிவிஎஸ் மோட்டார் தற்போது எலக்ட்ரிக் வாகன பிரிவில் பெரிய அளவில் வர்த்தகத்தை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதேவேளையில் green fuel அதாவது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காக எரிபொருளில் இயங்கும் வாகனங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது.