உலகம் முழுக்க மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது மிக அதிகமாக இருந்து வந்தாலும், இந்தியாவில் பயன்பாடு குறைவு தான். எனினும் தற்போது தான் பரவலாக மின்சார வாகன சந்தையானது சற்றே மேம்பட தொடங்கியுள்ளது.
இதனால் தான் நாட்டில் தற்போது பற்பல நிறுவனங்களும் மின்சார வாகன சந்தையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இது ஒரு புறம் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும், போட்டிகளை சமாளிக்கவும் பல பெரும் நிறுவனங்கள் கூட தொடர்ந்து மின்சார வாகன சந்தையில் கவனம் செலுத்தி வருகின்றன.
மின்சார வாகன உற்பத்திகாக முதலீடு
அந்த வகையில் 110 ஆண்டுகள் பழமையான தமிழ் நாட்டினை சேர்ந்த வாகன நிறுவனமான டிவிஎஸ், அதன் மின்சார வாகன சந்தையினை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, மேலும் 1000 கோடி ரூபாயினை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரிக்க பிரத்யேக ஆலையை வைத்துள்ளது.
எவ்வளவு திறன்
எனினும் அந்த ஆலை சிறியது என்பதால், மேற்கொண்டு விரிவுபடுத்தும் விதமாக இந்த முதலீட்டினை செய்யவுள்ளது. விரிவுபடுத்த இருக்கும் இந்த ஆலையானது வருடத்திற்கு சுமார் 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உதிரி பாகங்களும் உற்பத்தி
இந்த ஆலையில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என லிஸ்டில் உள்ளன. அது மட்டும் அல்ல, இந்த வாகனங்களுக்கு தேவையான பேட்டரி மற்றும் பிற முக்கியமான பாகங்களை உற்பத்தி செய்வது என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக, ஒருங்கிணைந்த ஆலையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
நிறுவனம் இலக்கு
டிவிஎஸ் நிறுவனம் இந்த மின்சார வாகன உற்பத்தியினை ஊக்குவித்து வரும் நிலையில், 24 மாதத்திற்குள் அதன் போர்ட் போலியோவில் 5 - 25KW ரேஞ்சில் இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வெளியிட இலக்கும் வைத்துள்ளது.
எத்தனை பேர் வேலை?
ஏற்கனவே இந்த நிறுவனத்தில் 500 - 600 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் இன்னும் இதன் விரிவாக்கம் செய்யப்படும்போது, இன்னும் தமிழகத்தில் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எங்கு கிடைக்கிறது?
ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் அதன் முதல் மின்சார வாகன நிறுவனமான iQube என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த ஐக்யூப் வாகனம் பெங்களூரு, சென்னை, கோயமுத்தூர், டெல்லி, புனே போன்ற நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 2022ம் நிதியாண்டிற்குள் 1000 முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் பங்கு விலை
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி, 2.35 ரூபாய் அதிகரித்து, 611.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்சம் 615.40 ரூபாயாக இருந்த நிலையில், குறைந்தபட்ச விலையானது 607.30 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலையே 666 ரூபாயாகும்.