நாளுக்கு நாள் எரிபொருட்களுக்கான விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான மோகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இப்படி படிப்படியாக அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், ஆரம்பத்தில் இருந்தே தங்களை முன்னிறுத்திக் கொள்ள, ஒவ்வொரு வாகன நிறுவனமும் முயற்சி எடுத்து வருகின்றன.
காலத்திற்கு ஏற்ப தங்களது வணிகத்தினையும் மாற்றிக் கொள்ள முனைந்து வருகின்றன. இதனால் தற்போதிலிருந்தே மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
நம் ஊர் டிவிஎஸ்
இதில் மிகப்பெரிய வாகன நிறுவனங்கள் வழக்கம்போல, தங்களது சந்தை பங்கினை விட்டுக் கொடுக்காமல் இருக்க அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பல வருடங்களாகவே இரு சக்கர வாகன விற்பனையில் தனக்கென தனி இடத்தினை கொண்டுள்ள டிவிஎஸ், மின்சார வாகனத்திலும் கவனம் செலுத்தி வருகின்றது. தற்போது அதன் மின்சார வாகன சந்தையின் மதிப்பு 3.5 - 4 பில்லியன் டாலர்களாகும்.
டிவிஎஸ்- ன் அதிரடி திட்டம்
இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ், தற்போது அதன் மின்சார வாகன வணிகத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன், அதனை விரிவாக்கம் செய்ய 3,700 கோடி ரூபாய் வரையில் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சர்வதேச முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை
இந்த முதலீடு குறித்து சர்வதேச முதலீட்டாளர்களுடன், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மின்சார வாகனத்திற்கான தனி நிறுவனம் ஒன்று உருவாக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் பிரத்யேகமாக மின்சார வாகனங்களுக்கான செயல்பாடுகளை துரிதமாக செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளது.
தொடர் விரிவாக்கம்
சமீபத்தில் சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்ட மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் முழுமையாக மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே 500 பணியாளர்களையும் தயார்படுத்தியுள்ளதாகவும் அப்போதே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் திட்டம்
சமீபத்தில் தான் மற்றொரு வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டிபிஜி கேப்பிட்டல் நிறுவனத்திடம் இருந்து 1 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டியது. இந்த நிறுவனத்தின் மின்சார வாகன மதிப்பானது 9.1 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதே டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு போட்டியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜூலை மாதமே, மின்சார வாகனங்களுக்கு என துணை நிறுவனத்தினை தொடங்கியது.
முயற்சி எடுக்கலாம்
டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த நிதி திரட்டல் குறித்து உண்மையான நிலவரம் என்ன என்று தெரியாவிட்டாலும், போட்டி நிறுவனங்கள் மிக வேகமாக முதலீடுகளை துரிதப்படுத்தி வரும் நிலையில், தனது நிலையினை தக்க வைத்துக் கொள்ள, நிச்சயம் முயற்சி எடுக்கலாம்.
முதலீடு அறிவிப்பு
ஏற்கனவே மின்சார வாகன உற்பத்திகாக 1,000 கோடி ரூபாயினை சமீபத்தில் முதலீடு செய்தது. இதன் மூலம் இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் என கவனம் செலுத்த உள்ளதாகவும், இவையனைத்தும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தைக்கு வரலாம் எனவும் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தது.
இன்று பங்கு விலை நிலவரம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் கிட்டதட்ட 4% அதிகரித்து, 738.50 ரூபாயாக காணப்படுகின்றது. இதே பி எஸ் இ-யிலும் 4% அதிகரித்து 738.90 ரூபாயாக காணப்படுகின்றது. இன்றைய உச்ச விலை 793.45 ரூபாயாகும். இது தான் இதன் 52 வார உச்சமாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 733.40 ரூபாயாகும்.