இன்றைய பல இளைஞர்களுக்கு ரேசன் கார்டு இருக்கோ இல்லையோ. நிச்சயம் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள்.
அந்தளவுக்கு பெரும்பாலான இளைஞர்களின் ரத்தத்தில் ஊரிப் போன சமூக வலைதளங்கள் கூட, இன்று சீனாவின் கொரோனாவினைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன.
கோவிட் -19 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவின் தாக்கம் குறித்த பயத்தினால் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டர் தனது 5,000 ஊழியர்களை பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்து பணிபுரிய வலியுறுத்தியுள்ளது.
வீட்டிலிருந்து வேலை
கொரோனா பரவலில் எதிரொலியாக பல இடங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் இப்படியொரு அதிரடி முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியாவில் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்கள் அப்படி தான் வலியுறுத்தியுள்ளன
ட்விட்டர் மட்டும் அல்ல, அமெரிக்காவில் பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் கூட தங்களது ஊழியர்களை கட்டாயம் வீட்டிலிருந்து பணிபுரிய வலியுறுத்தியுள்ளதாம். குறிப்பாக AT&T Inc. சிட்டிகுருப் இன்க், இதே போல பேஸ்புக் இன்க், ஆல்பாபெட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட தங்களது கார்ப்பரேட் கூட்டங்களுக்காக மற்ற நாடுகளுக்கு செல்வதை தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூட்டங்கள் ரத்து
சில நிறுவனங்கள் மற்ற நாடுகளில் நடக்கவிருக்கும் முக்கிய கூட்டத்தினை ஒத்தி வைத்துள்ளதாகவும், சில நிறுவனங்கள் நடக்கவிருந்த கூட்டத்தினை ரத்து செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே ஸ்கொயர் இன்க் நிறுவனமும் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது நல்ல விஷயம் தான்
கொரோனாவின் பயத்தினால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கூறியிருப்பது நல்ல விஷயம் தான். எனினும் அத்தியாவசியமாக வந்தே ஆக வேண்டும் என்ற ஊழியர்களுக்காக நிறுவனங்கள் திறந்திருக்கும் என்றும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன. எப்படி எனினும் சீனாவினை போல் பெருத்த அடி வாங்காமல் இருந்தால் சரி தான்.