சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கிய உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தற்போது சொகுசு விமானம் ஒன்றை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.640 கோடி என்றும் இந்த விமானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன என்றும் தெரிய வருகிறது.
இந்த விமானம் குறித்த விரிவான தகவல்களை தற்போது பார்ப்போம்.
எலான் மஸ்க்
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதும் அந்த நிறுவனத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
சொகுசு விமானம்
இந்த நிலையில் தனது சொந்த பயன்பாட்டிற்காக சொகுசு விமானம் ஒன்றை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. Gulfstream G700 என்ற ரகத்தை சேர்ந்த இந்த சொகுசு விமானத்தை எலான் மஸ்க் வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் அடுத்த ஆண்டு அவரிடம் இந்த விமானம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன வசதிகள்
இந்த விமானத்தில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் அதிக இடவசதி மற்றும் சொகுசு அம்சங்கள் இருப்பதாகவும் 19 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானம் அதிகபட்சமாக 51,000 அடி வரை பறக்க கூடியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.640 கோடி
இந்த விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் 640 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சினில் இந்த விமானம் இயங்கும் என்றும் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 14,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையில் இந்த விமானம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வைஃபை வசதி
மேலும் இந்த விமானத்தில் வைஃபை வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது எலான் மஸ்க் G650ER என்ற ரக விமானத்தை பயன்படுத்தி வருகிறார் என்ற நிலையில் அடுத்த ஆண்டு முதல் புதிய விமானத்தில் அவர் பயணம் செய்வார் என்று தெரிகிறது.
4 விமானங்கள்4 விமானங்கள்
ஏற்கனவே எலான் மஸ்க் இடம் 4 தனி விமானங்கள் உள்ள நிலையில் தற்போது அவர் ஐந்தாவது ஆகவும் ஒரு விமானத்தை வாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தை தயார் செய்வது அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்று கூறப்படுகிறது.