உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டர், ஒப்பந்தத்தின் பல விதிகளை மீறியதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிர்வாக குழு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
44 பில்லியன்
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டார். நிர்வாக குழு மற்றும் எலான் மஸ்க் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளியாகின.
காரணம்
ஆனால் தற்போது இந்த ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்படுவதாக எலான் மஸ்க் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணமாக ட்விட்டர் நிர்வாகம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் உள்ளது என்றும், தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் உள்ளது என்றும் எலான்மஸ்க் கூறியிருந்தார்.
போலி கணக்குகள்
ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகள் குறித்த தகவல்களுக்கு ட்விட்டர் நிர்வாகம் பதிலளிக்க தவறிவிட்டது என்று டுவிட்டர் நிர்வாகத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் விதிகளை ட்விட்டர் மீறி உள்ளது என்றும் ட்விட்டரில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதால் அதனை நீக்கும் பணியை ட்விட்டர் நிர்வாகம் செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ரத்து
போலி கணக்குகள் குறித்த உண்மையான அளவை குறிப்பிட்டால் மட்டுமே ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பங்குகள் சரிவு
எலான் மஸ்க் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சரிந்தது. இன்று ஒரே நாளில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்போராட்டம்
இந்த ஒப்பந்தத்தின் ரத்து காரணமாக ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் மஸ்க் இடையே சட்ட போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிற.து ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கவில்லை என்றால் ஒரு பில்லியன் டாலர் பிரேக்-அப் கட்டணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டணத்தை டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் இடம் கேட்டு வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.
டுவிட்டர் தலைவர்
இதுகுறித்து டுவிட்டர் தலைவர் பிரெட் டெய்லர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, 'இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கையை தொடர உள்ளோம் என்றும், இந்த சட்டப் போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.