மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா, அடுத்த நிதியாண்டிலேயே குறைந்தபட்சம் 50 முதல் 66 சதவிகித வருமான வரி செலுத்துவோர் பழைய வருமான வரி விதிப்பு முறையில் இருந்து புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
50 முதல் 66 சதவீதம் என்றால் தற்போது பழைய வருமான வரி விதிப்பு முறையைப் பயன்படுத்துவோரில் மூன்றில் 2 பங்கு மக்கள் புதிய வருமான வரி பிரிவுக்கு மாற உள்ளனர்.
மத்திய அரசு 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனி நபர் வருமான பிரிவில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பெரும்பாலான அறிவிப்புகள் புதிய வருமான வரி விதிப்பு முறையைச் சார்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
CBDT தலைவர் நிதின் குப்தா
CBDT தலைவர் நிதின் குப்தா செய்தியாளர்களிடம் பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் பேசுகையில் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு எத்தனை பேர் மாறுவார்கள் என்பதை வரி செலுத்துவோர் முடிவில் தான் உள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோர் எந்த வரி விதிப்பு முறையைப் பயன்படுத்தப் போகிறார் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
66 சதவீதம்
ஆனால் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் என்று நாங்கள் நினைக்கிறோம். 50-66 சதவீதம் (மூன்றில் இரண்டு பங்கு) வரி செலுத்துவோர் முதல் ஆண்டிலேயே புதிய வரி முறைக்கு மாற வாய்ப்புள்ளது நிதின் குப்தா ANI-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தள்ளுபடி வரம்பு
2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் சம்பளம் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் வருமான வரி தள்ளுபடி வரம்பை பட்ஜெட் அறிவிப்பில் தற்போது இருக்கும் 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதன் வாயிலாக இந்தப் பலனை பெற மக்கள் பழைய வருமான வரி விதிப்பு முறையில் இருந்து புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார் CBDT தலைவர் நிதின் குப்தா.
மாத சம்பளக்காரர்கள்
இந்த அறிவிப்பு மூலம் மாத சம்பளக்காரர்கள் மட்டும் அல்லாமல் சம்பளம் அல்லாமல் தொழில் செய்யும் தனிநபர்களும் இந்த வரிப் பலகை மாற்றம் மூலம் பயன்பெற உள்ளனர். மேலும் 7 லட்சம் வரையிலான வருடாந்திர வருமானம் கொண்டவர்கள் அனைவருக்கும் முழுமையாக டாக்ஸ் ரிபேட் சலுகை கிடைக்க உள்ளது.
ஜீரோ வரி விதிப்பு
இது மட்டும் அல்லாமல் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 50000 ரூபாய்க்கு கூடுதல் வரிச் சலுகை கிடைத்துள்ளது.
இந்த உயர்வு பழைய வருமான வரி விதிப்பு முறைக்கு இல்லை.
புதிய வரிப் பலகை
புதிய வருமான விதிப்பு முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால், இதை மேலும் எளிதாதக்கும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் புதிய வருமான வரி விதிப்பு முறை கீழ்
0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி